ADDED : ஏப் 14, 2026 05:38 AM

முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தில் வரவுள்ள திருத்தங்களை எதிர்த்து வருகிறார். சிறுபான்மையினருக்கு எதிரானது என்கிறார். இந்த சட்டம் என்ன?
நம் நாட்டில், 30 லட்சத்திற்கும் மேலான அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் அதிகபட்சமாக 1.87 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இவை, அதிகளவில், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, டில்லி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தான் உள்ளன.
தொண்டு நிறுவனங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், 22,000 கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. இந்த நிதி தேச விரோதமாகவும் பயன்படுத்தப்படலாம் என்பதால், அதை நெறிமுறைப் படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அவசியமாகிறது.
வெளிநாட்டு நிதி வருகையை கட்டுப்படுத்தும் முக்கிய சட்டம், எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் - 1976. வெளிநாட்டு நிதி மூலம், நம் நாட்டு அரசியல் மற்றும் நம் சமூகத்தில், வெளிநாட்டு தலையீட்டை தடுத்து, இந்திய இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது. கடந்த 2010 மற்றும் 2020ல், இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
2010 மாற்றங்கள்
* தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்வது கட்டாயம்
* ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்
* நிதி குறிப்பிட்ட நோக்கத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும்
* ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வது கட்டாயம்
* அரசின் ஆய்வு மற்றும் கண்காணிப்பு அதிகாரம் அதிகரிப்பு.
2020 மாற்றங்கள்
* ஒரு தொண்டு நிறுவனம் மற்றொரு தொண்டு நிறுவனத்திற்கு நிதி அனுப்புவதற்கு தடை
* வெளிநாடுகளில் இருந்து நிதி பெற, 'தர்ப்பன்' என்ற அடையாள அனுமதியை பெற வேண்டும்
* வெளிநாட்டு நிதி, டில்லியில் உள்ள குறிப்பிட்ட எஸ்.பி.ஐ., வங்கி கிளையின் வாயிலாகவே வர வேண்டும்
* வரும் நிதியில் இருந்து, நிர்வாக செலவு என, தொண்டு நிறுவனங்கள், ஒரு தொகையை எடுத்துக்கொள்ளும். அது 50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைப்பு
* நிதி தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டாலோ, மடைமாற்றப்பட்டாலோ, அந்த தொண்டு நிறுவனத்தின் பதிவை ரத்து செய்து, வங்கி கணக்கை முடக்க, அரசுக்கு அதிகாரம் கொடுத்தது.
2026 மாற்றங்கள்
தற்போது, லோக்சபாவில் விவாதிக்கப்பட்டு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் வரவுள்ள மாற்றங்கள்:
* டிஜிட்டல் முறையில் நேரடியாக தொண்டு நிறுவனங்களை கண்காணிக்கும் வசதி
* செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பரிசோதனை. ஆனால், இதிலிருந்து சிறிய தொண்டு நிறுவனங்களுக்கு தளர்வு
* கல்வி, ஆராய்ச்சி செய்யும் கல்வி அமைப்புகளுக்கு பல சலுகைகள்
* தொண்டு நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டாலும், பதிவு அனுமதி மறுக்கப்பட்டாலும் மீளாய்வுக்கான வழி செய்யப்பட்டு உள்ளது
* பதிவு மற்றும் பதிவு புதுப்பிப்பு எளிமையாக்கப்பட்டுள்ளன
* உரிய கால அவகாசத்திற்குள் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்றால், தொண்டு நிறுவனம் அரசு மயமாக்கப்படும்.
நோக்கம்
நம் நாட்டு விவகாரங்களில், வெளிநாட்டு தலையீடு எப்போதுமே இருந்துள்ளது. அண்மை காலத்தில் இது வெகுவாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக, வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள். இவை, தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நிதி வாயிலாகவே சாத்தியமாகின்றன.
லோக்சபாவை முடக்குவதற்கும், அரசியல் கட்சிகளின் பின்னணியில் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல உள்நாட்டு கலகங்கள் வெளிநாட்டு தலையீட்டால் தான் நடக்கின்றன.
தேச நலனிற்காக மேற்கொள்ளப்படும் இந்த சட்ட திருத்தம், சிறுபான்மையினருக்கு எதிரானது என்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
பல நுாறு கோடி நிதி பெற்று, சிறப்பாக செயல்பட்டு வரும், பெரிய தொண்டு நிறுவனங்களோ, 'உதவும் கரங்கள், 'பேனியன்' போன்ற தனிப்பட்ட தொண்டு நிறுவனங்களோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தொண்டு நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரசும், தி.மு.க.,வும் தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவை எதிர்ப்பு தெரிவிப்பதற்கு என்ன காரணம், என்ன உள்நோக்கம் இருக்கிறது?
வெறுமனே, தேர்தலுக்காக சிறுபான்மையினர் மத்தியில், பா.ஜ., மீது வெறுப்புணர்வு ஏற்படுத்துவதற்கு என்றால், அது முற்றிலும் பொறுப்பில்லாத செயல். அல்லது, வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக தி.மு.க.,வும் காங்கிரசும் பயனடைகின்றன என்றால், அது மன்னிக்கவே முடியாத தேச விரோத செயல்.
எப்படி பார்த்தாலும், முதல்வர் வாதத்தில் பெரும் ஓட்டைகள் தான் உள்ளன. தேச நலன் கருதி தனது பொய் பிரசாரத்தை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

