தனித்து போட்டியிடுவது இனி வேலைக்கு ஆகாது: முடிவை மாற்ற சீமானிடம் கட்சியினர் வலியுறுத்தல்
தனித்து போட்டியிடுவது இனி வேலைக்கு ஆகாது: முடிவை மாற்ற சீமானிடம் கட்சியினர் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 02, 2026 05:33 AM

- நமது நிருபர் -
'சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சதவீதம் பாதியாக குறைந்ததால், தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றம் தேவை' என, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி, கடந்த 2016 முதல் அனைத்து தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. அதன்படி, 2016 சட்டசபை தேர்தலில் 1.10 சதவீதம் ஓட்டுகளை பெற்ற அக்கட்சி, 2019 லோக்சபா தேர்தலில் 3.89 சதவீதம் ஓட்டுகளை பெற்றது.
ஓட்டு சதவீதம்
அடுத்து, 2021 சட்டசபை தேர்தலில் 6.72 சதவீதம், 2024 லோக்சபா தேர்தலில் 8.22 சதவீதம் ஓட்டுகளை பெற்று, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து அக்கட்சியின் ஓட்டு சதவீதம் அதிகரித்து வந்தது.
அதேநேரம், த.வெ.க., தலைவரான முதல்வர் விஜய் அரசியலுக்கு வந்த பின், சீமானின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, விஜயை கடுமையாக விமர்சித்ததுடன், ஈ.வெ.ராமசாமி மற்றும் திராவிட கொள்கைகளையும் கடுமையாக சாடினார். மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களை விட, தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் சீமான் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்படி இருந்தும், நாம் தமிழர் கட்சியின் ஓட்டு, 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த முறை சில தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், இம்முறை டிபாசிட்டை கூட பெற முடியாத அளவிற்கு தோல்வியை சந்தித்தனர். இதற்கு த.வெ.க., முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் தேர்தல்களில் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திப்பது குறித்து சீமான் முடிவெடுக்க வேண்டும் என, அவரது கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
சொந்த பணம்
இது குறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: த.வெ.க., வருகைக்கு முன், நாம் தமிழர் கட்சி தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. பல இளைஞர்கள் சீமானை தலைவராக ஏற்றுக் கொண்டு பயணித்தனர். தற்போது அந்த நிலை இல்லை.
அதேநேரம், நாம் தமிழர் கட்சியை விரும்பக்கூடிய மக்களும் இருக்கத் தான் செய்கின்றனர். அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும். அவர்களால் மட்டும் வெற்றி பெற முடியாது. எனவே, வரும் தேர்தல்களில், கொள்கை சார்ந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும்.
குறிப்பாக, த.வெ.க.,வை வீழ்த்த, தி.மு.க., போன்ற கட்சிகளுக்கு நம் கூட்டணி தேவையாக உள்ளது. எனவே, கூட்டணி அமைக்க சீமான் முன்வர வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம்.
மற்றொரு பக்கம் தேர்தல் நிதியும் பெரும் சுமையாக இருக்கிறது. கட்சி தலைமையிடம் இருந்து போதியளவில் நிதி வழங்கப்படுவதில்லை. பெரும்பாலானோர் தங்கள் சொந்த பணத்தை செலவிட்டு தோல்வி அடைத்து வருகின்றனர். இனி வரும் காலங்களில், இந்நிலை மாற, சீமான் தன் நிலையை மாற்றி முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
