UPDATED : மே 10, 2026 09:59 PM
ADDED : மே 10, 2026 10:01 PM

கோவை:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கோவையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்லுாரிகளை நாடி வருவதால், கல்லுாரிகளில் விண்ணப்ப விநியோகம், பதிவு மற்றும் ஆலோசனைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கோவை மாவட்டம் கல்வி மையமாக திகழ்வதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் இங்கு சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி காரணமாக கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு போன்ற தொழில்நுட்ப படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதே போல், உயிர்த்தொழில்நுட்பம், சுகாதார அறிவியல் படிப்புகளுக்கும் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்களை ஈர்க்கும் வகையில் பல கல்லுாரிகள் சிறப்பு கல்வி உதவித்தொகை, கட்டண சலுகை மற்றும் விடுதி வசதிகளை அறிவித்து வருகின்றன.
சலுகைகள், வீட்டிற்கு அருகில் மற்றும் நண்பர்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என மாணவர்கள் படிப்பை தேர்ந்தெடுக்கக் கூடாது. கல்லுாரி மற்றும் தேர்ந்தெடுக்கும் பாடத்தின் அங்கீகாரம் குறித்து நன்கு ஆய்வு செய்த பின் சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
