UPDATED : ஜூன் 15, 2026 11:01 AM
ADDED : ஜூன் 15, 2026 11:01 AM
ஹரித்வார்:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை தொடங்கிய யோகா குரு ராம்தேவ், அதன் தலைவராக பயிற்சியாளரும், தேர்வு வழிகாட்டியுமான அவத் ஓஜாவை நியமித்துள்ளார்.
யோகா குரு ராம்தேவ், 'பதஞ்சலி' நிறுவனத்தின் சார்பில் ஆயுர்வேத மருந்துகள், இயற்கை உணவுப் பொருட்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கொரோனா காலத்தில், ஆங்கில மருத்துவத்துக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து விளம்பரம் வெளியிட்டதால், பதஞ்சலி நிறுவனம் சர்ச்சையில் சிக்கியது. இதற்கு ராம்தேவ் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், உத்தரகண்டின் ஹரித்வாரில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையத்தை ராம்தேவ் தொடங்கி உள்ளார். 'பதஞ்சலி சிவில் சர்வீசஸ் அகாடமி' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள மையத்தில், தேர்வு பயிற்சியுடன் யோகா தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இந்த பயிற்சி மையத்தின் தலைவராக யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வழிகாட்டியான அவத் ஓஜா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், கடந்தாண்டு டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பயிற்சி மையத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு, 1 லட்சம் ரூபாயும், பிறருக்கு, 2.5 லட்சம் ரூபாயும் பயிற்சிக்கான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
