ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்க தனியாருக்கு அழைப்பு
ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்க தனியாருக்கு அழைப்பு
UPDATED : மார் 23, 2026 02:42 PM
ADDED : மார் 23, 2026 02:43 PM
சென்னை:
நாட்டில், பழமையான ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள் உள்ளிட்ட அறிவுசார் ஆவணங்கள், பயன்பாடில்லாத நிலையில் பலரிடம் உள்ளன. அவற்றை பராமரிக்காததாலும், பராமரிப்பு முறை தெரியாததாலும், அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவற்றை, அறிவுசார் சொத்தாக பாதுகாக்கும் வகையில், 60 கோடி ரூபாய் செலவில், டிஜிட்டல் மயமாக்கும் வகையில், 'ஞான பாரதம்' என்ற திட்டத்தை, மத்திய தொல்லியல் துறை ஏற்படுத்தி உள்ளது.
இதில், தனியார் பயனடைய வேண்டும் என, மத்திய தொல்லியல் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டின் பாரம்பரிய அறிவை, உலக புரிதலுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக, கடந்தாண்டு துவங்கப்பட்ட திட்டம் தான் ஞான பாரதம்.
இதன்படி, கோவில்கள், நுாலகங்கள், பொதுக் களஞ்சியங்கள், பல்கலை உள்ளிட்ட ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தனியாரிடம் உள்ள எழுதப்பட்ட ஆவணங்களை, டிஜிட்டல் மயமாக்குவதே இதன் நோக்கம்.
தற்போது வரை, 32 லட்சத்து 20,927 ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. பொதுவாக, நம் முன்னோர் பல்வேறு மரப்பட்டைகள், இலைகள், ஓலைகளை பதப்படுத்தி எழுதி உள்ளனர். அவை, காலப்போக்கில் அழியும் தன்மை உள்ளவை.
அவற்றில், தத்துவம், அறிவியல், மருத்துவம், கணிதம், வானியல், இலக்கியம், கலைகள் மற்றும் அரசியல் துறைகள் ஆவணமாக்கப்பட்டு உள்ளன. அவற்றை சேகரித்து, டிஜிட்டல் மயமாக்கி, அசல் ஆவணங்களை உரியவர்களிடமே ஒப்படைக்கிறோம்.
ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க விரும்புவோர், '011- 23446327, 011- 23446326' என்ற தொலைபேசி எண்ணிலோ, 'namamimanuscript@gmail.com' என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
