UPDATED : மார் 18, 2026 05:35 PM
ADDED : மார் 18, 2026 05:38 PM
திருப்பூர்:
'பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் கணக்கு பாடம், எளிதாக இருந்தது,' என, மாணவர்கள் தெரிவித்தனர்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடந்து வரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், நேற்று கணக்கு, வணிகவியல் மற்றும் விலங்கியல் பாடத்துக்கான தேர்வு நடந்தது. இதில், கணக்கு, வணிகவியல் தேர்வுகள் மிகவும் எளிதாக இருந்ததாக, மாணவ, மாணவியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பானுஜா:
கணக்கு தேர்வில் 2, 3 உள்ளிட்ட கேள்விகள் எளிமையாக இருந்தது. படித்த கேள்விகள் தான், பெரும்பாலும் கேட்கப்பட்டிருந்தன. கட்டாய வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தது. இருப்பினும், 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.
நிஷா:
கணக்கு பாடம் கடினமாக இருக்கும் என நினைத்தேன்; ஆனால், எளிமையாக இருந்தது. 2, 3, 5 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தது. வினாத்தாளை பார்த்ததுமே, பயம் போய்விட்டது. டென்ஷன் இல்லாமல், கணித தேர்வை முடித்தேன்
வைஷாலி:
வணிகவியல் பாடத்தில் ஒரு சில கேள்விகள் மட்டும், புத்தகத்தின் உட்புறம் இருந்து கேட்கப்பட்டிருந்தது. பெரும்பாலும், படித்த கேள்விகளே கேட்கப்பட்டிருந்தன. எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் கிடைக்கும் என நம்புகிறேன்.
'கனவை நனவாக்கும்'
ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், “உயர் கல்வியில் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்ய விரும்பும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 கணித பாடம் மிகவும் முக்கியம். கணித பாடத்தின் முழு மதிப்பெண் கட் ஆப் ஆக எடுத்துக் கொள்ளப்படும்.
அந்த அடிப்படையில், கணித பாடம் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளதால், இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்யும் மாணவர்களின் கனவு நனவாகும் என, எதிர்பார்க்கிறோம்” என்றனர்.
