ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு சென்னை மண்டலத்தில் அதிக தேர்ச்சி
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு சென்னை மண்டலத்தில் அதிக தேர்ச்சி
UPDATED : ஜூன் 02, 2026 10:15 AM
ADDED : ஜூன் 02, 2026 10:17 AM

புதுடில்லி:
ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் டில்லி மண்டலத்தைச் சேர்ந்த சுபம் குமார், 360க்கு 330 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், மத்திய அரசின் உயர்க்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,க்களில் சேர, ஆண்டுதோறும் ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்தத் தேர்வு, முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என, இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இதில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், என்.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர தகுதிப் பெறுவர். இதே போல், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெறுவோர், ஐ.ஐ.டி.,க்களில் சேர தகுதி பெறுவர்.
அந்த வகையில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அட்வான்ஸ்டு தேர்வு கடந்த மாதம், 17ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வை, ஐ.ஐ.டி., ரூர்க்கி நடத்திய நிலையில், அதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
இத்தேர்வை, மொத்தம் 1,79,694 பேர் எழுதினர். இதில், டில்லி மண்டலத்தைச் சேர்ந்த சுபம் குமார், 360க்கு 330 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பிடித்தார்.
இதே போல் மாணவியரில், டில்லி மண்டலத்தைச் சேர்ந்த ஆரோஹி தேஷ்பாண்டே என்பவர் 360க்கு 280 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில், 77வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
மண்டல அளவில், சென்னை ஐ.ஐ.டி.,யில் தான் அதிகபட்சமாக, 14,294 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்கு அடுத்ததாக, ஐ.ஐ.டி., மும்பை மண்டலத்தில், 12,389 பேரும், டில்லி மண்டலத்தில், 10,697 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
