UPDATED : செப் 24, 2025 08:54 AM
ADDED : செப் 24, 2025 08:55 AM

சென்னை:
தமிழ்நாடு அரசு, கடலோர சூழலியல் பாதுகாப்பில் புதிய படியை எடுத்து, மாநிலத்தின் முதல் அலையாத்திக் காடுகள் மாநாட்டை செப்டம்பர் 23, 2025 அன்று மகாபலிபுரத்தில் நடத்தியது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 2400 ஹெக்டேர் பரப்பில் புதிய நடவு மற்றும் 1200 ஹெக்டேர் பரப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், அலையாத்திக் காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளது. எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்குப் பிந்தைய மீட்டுருவாக்கம், பறவைகள் வருகையும் கடலோரப் பாதுகாப்பும் மேம்படச் செய்துள்ளது.
மாநாட்டில் மத்திய, மாநில அதிகாரிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், சமூகத் தலைவர்கள் பங்கேற்று, அலையாத்திக் காடுகளின் எதிர்கால சவால்கள் குறித்து கலந்துரையாடினர். இந்த நிகழ்வில் “தமிழ்நாட்டின் அலையாத்திப் பயணம்” எனும் விரிவுரையும் வெளியிடப்பட்டது.
மேலும், தமிழ்நாடு அரசு மற்றும் UNEP இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் நகர்ப்புற சூழல் பாதுகாப்பு, குப்பை மேலாண்மை, காற்றுத் தர கண்காணிப்பு, பசுமைப் பணியிடங்கள் போன்ற துறைகளில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
அத்துடன், எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை உடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகி, காலநிலை கல்வியறிவு, கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பு, சமூக பங்குபற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மாநாட்டில் நடந்த கருத்தரங்குகள் மற்றும் வழக்காய்வுகள், அலையாத்திக் காடுகள் பாதுகாப்பை காலநிலை மாற்றத்துக்கு எதிரான முக்கிய இயக்கமாக மாற்றியது.
வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில் அலையாத்தி காடுகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. இதை பாதுகாக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக உள்ளன என, சிலர் புரியாமல் பேசுகின்றனர்.
கடந்த 2021ல், 11,119 ஏக்கராக இருந்த அலையாத்தி காடுகளின் பரப்பளவு, தற்போது, 22,239 ஏக்கராக அதிகரித்துள்ளது. அதாவது, நான்கு ஆண்டுகளில், அலையாத்தி காடுகளின் பரப்பளவு, இரு மடங்காக உயர்ந்துள்ளது, என்றார்.