UPDATED : ஜூன் 19, 2026 06:11 PM
ADDED : ஜூன் 19, 2026 06:12 PM
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் மதுபாலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 95 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்தாண்டு, பிளஸ் 2 படித்த, 9,670 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்திருப்பதை உறுதிப்படுத்த, மாவட்ட அளவில் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதலாவது தளத்தில் அறை எண் 108ல் செயல்பட்டு வருகிறது.
பெற்றோர் அற்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்கள் உள்பட பல்வேறு காரணங்களால் உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து, உயர்கல்வியில் சேர்க்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.
உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையின் மூலம் மாணவர்கள் சேர விரும்பும் உயர்கல்வி பாடப்பிரிவு எந்த கல்லூரியில் உள்ளது, காலியிடம் உள்ளதா என்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., போன்ற தொழில் சார்ந்த படிப்புகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உயர்கல்வி சார்ந்த உதவிகள், ஆலோசனை, கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ கல்லூரிகளின் காலிப்பணியிடங்கள் சார்ந்த விவரங்கள் என அனைத்து தகவல்களும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை வாயிலாக வழங்கப்படும்.
உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், உயர்கல்வி கட்டுப்பாட்டு அறையை நேரிலோ 18005994286 என்ற எண்ணிலோ, 9788858794 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவோ தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறினார்.
