புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளுங்க
புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளுங்க
UPDATED : செப் 15, 2025 12:00 AM
ADDED : செப் 15, 2025 08:33 AM

மதுரை :
மதுரை தமுக்கத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி), பொது நுாலக இயக்ககம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்து வரும் புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
குளிரூட்டப்பட்ட அரங்கில் 231 ஸ்டால்களில் ஏராளமான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இலக்கியவாதிகள், புத்தகப் பிரியர்கள் என பலரும் கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை அள்ளிச் செல்கின்றனர்.
பபாசி செயலாளர் முருகன் கூறுகையில், ''இதுவரை ரூ.70 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. போட்டித் தேர்வு, நவீன இலக்கியம், குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின.
இம்முறை பள்ளி மாணவர்களின் வருகை அதிகம். வாசிப்புத் திறன் இன்னும் மேம்பட வேண்டும். பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொண்டாலும், அலைபேசியில் படிக்காமல் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும்'' என்றார்.
தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளிச் செல்ல இன்றே கடைசி வாய்ப்பு. காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். அனுமதி இலவசம். வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி, பள்ளி மாணவர்களுக்கு 5 சதவீத கூடுதல் தள்ளுபடி உண்டு.
தினமலர் சந்தா ரூ.1999 செலுத்தினால்ரூ.1000 மதிப்பில் புத்தகங்கள் இலவசம்
புத்தக கண்காட்சியில், தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா ஸ்டாலில் (எண் 24, 25) 'சந்தா ஒன்று, பலன் மூன்று' சலுகை வழங்கப்படுகிறது. ரூ.1999 செலுத்தி ஆண்டு சந்தாவில் இணைந்தால், ஓராண்டிற்கான தினமலர் நாளிதழ், ரூ.5 லட்சம் மதிப்பிலான தனிநபர் விபத்து காப்பீடு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவிற்கான காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு ஆகிய பலன்கள் கிடைக்கின்றன. கூடுதல் பலனாக ரூ.1000 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த புத்தகங்களை தாமரை பிரதர்ஸ் அரங்கில் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.