பள்ளிகளில் அகல்விளக்கு திட்டம்; பொறுப்பு ஆசிரியைக்கு பயிற்சி
பள்ளிகளில் அகல்விளக்கு திட்டம்; பொறுப்பு ஆசிரியைக்கு பயிற்சி
UPDATED : செப் 24, 2025 08:58 AM
ADDED : செப் 24, 2025 08:59 AM

சேலம்:
அரசு பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியரின் உடல், மனம், சமூக பாதுகாப்பு மற்றும் இணையதள உலகில் சைபர் மோசடிகளில் சிக்காமல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 'அகல்விளக்கு' என்ற பெயரில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு தமிழக அரசு சார்பில் சிறு கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவியர் பாதுகாப்பாக இணையத்தை அணுகும் விதம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியை தலைமையில் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு பிரச்னை, சிக்கல் வந்தால், அதிலிருந்து மீண்டு வர ஆலோசனை வழங்க, வழிகாட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் இக்குழுவில் இடம்பெறும் ஆசிரியைக்கு, ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அதன்படி, மாவட்ட அளவில் பயிற்றுனர்களை உருவாக்குவதற்கான பயிற்சி, உத்தமசோழபுரத்தில் உள்ளமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. அதன் மைய விரிவுரையாளர்கள் பயிற்சி அளித்தனர். இன்று வட்டார அளவில் பயிற்சி தமிழகம் முழுதும் நடக்கிறது. அதில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து ஆலோசனை குழுவில் இடம்பெறும், ஆசிரியைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவியர் தங்கள் பாதுகாப்பு, இணைய வழியில் வரும் சிக்கல்களை எதிர்கொள்வது, அதை பெற்றோர், ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பயிற்றுவிக்க, ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற ஆசிரியைகள் மாணவியருக்கு அகல்விளக்கு திட்டம் குறித்து விளக்குவர்.