திருமண ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபர் சுற்றிவளைப்பு
திருமண ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபர் சுற்றிவளைப்பு
ADDED : மே 14, 2026 01:41 AM
புதுடில்லி: வடகிழக்கு டில்லி, தயால்பூரில், ஏப்., 11ல், ஒரு திருமண ஊர்வலம் நடந்தது. இதை மாடி வீடுகளின் பால்கனியில் இருந்து பலர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அந்த ஊர்வலத்தில்,இரு வாலிபர்கள் துப்பாக்கிகளுடன் நடனமாடினர். அதில் ஒரு வாலிபர், திடீரென உற்சாக மிகுதியால் துப்பாக்கியால் சராமாரியாக வானை நோக்கி சுட்டார்.
இதில், பால்கனியில் நின்று கொண்டிருந்த பெண் தலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அந்த பெண் உடனடியாக ஜி.டி.பி., அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தயால்பூர் போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய, சுல்தான்பூரை சேர்ந்த ரிஷி என்ற மனு தாக்குர், 22, என்ற வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், சுல்தான்புரி கிருஷ்ண விஹாருக்கு நண்பர்களை சந்திக்க, ரிஷி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சுல்தான்பூரில் நேற்று முன் தினம் கண்காணித்த தனிப்படை போலீசார், ரிஷியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ரிஷி மீது சுல்தான்புரி போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
