சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
ADDED : செப் 12, 2025 12:32 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டுகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா பிரிவு போலீசார், உள்ளூர் போலீசாருடன் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் நடந்த மோதலில் நக்சலைட்டுகள் 2 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
2 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தையடுத்து இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் பல்வேறு என்கவுன்டர்களில் 243 நக்சல்கள் கொல்லப்பட்டனர் என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.
கரியாபான்ட் மாவட்ட வனப்பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூத்த நக்சல் பாலகிருஷ்ணா உட்பட நக்சலைட்டுகள் 10 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.