பீதியை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்: ராகுலுக்கு பாஜ பதிலடி
பீதியை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்: ராகுலுக்கு பாஜ பதிலடி
ADDED : ஜூன் 04, 2026 08:40 PM

புதுடில்லி: இந்தியா பொருளாதார சுனாமியை நோக்கி செல்வதாக கூறிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு பாஜ பதிலடி கொடுத்துள்ளது. மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டதுடன், மக்களிடம் பீதியை ஏற்படுத்த வேண்டாம் எனக்கூறியுள்ளது.
இது தொடர்பாக பாஜ செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உற்பத்தி மற்றும் சேவைத்துறை வலிமையாக உள்ளது. சில்லரை பணவீக்கம் ஏப்ரல் மாதம் 3.48 சதவீதமாக உள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கை விட குறைவு. நேரடி அந்நிய முதலீடு 94.5 பில்லியன் டாலரை தாண்டி உள்ளது.
இவை அனைத்தும், இந்திய பொருளாதாரம் மீண்டும் எழுவதற்கான அறிகுறிகள் ஆகும். பொது மக்கள்,வணிகம் மற்றும் வேலைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து நுகர்வோர் பாதுகாப்பை அரசு உறுதி செய்தது. உள்நாட்டு இருப்பை உறுதி செய்ய ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இவை உள்ளிட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது, 2011 ல் 294 பில்லியன் டாலர் ஆக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு 2013 ல் 256 பில்லியன் டாலர் ஆக குறைந்தது. இறக்குமதியும் வெகுவாக குறைந்தது. ரூபாயின் மதிப்பும் 36 சதவீதம் சரிவை சந்தித்தது.
வெளியில் இருந்து வரும் அதிர்வுகளால் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் இருந்தது. எனவே ராகுல் பீதியை விற்பனை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ராகுல் கூறுகையில், பொருளாதார சுனாமி வரகிறது. இந்தியாவின் பாதுகாப்பை பாஜ அரசு அகற்றிவிட்டது. இதனால் பொருளாதார சுனாமி வரப்போகிறது. விலைவாசி உயரப்போகிறது எனத் தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடிகொடுத்து தான் பாஜ அறிக்கை வெளியிட்டு உள்ளது.
