சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு
சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு
ADDED : ஜூன் 22, 2026 04:02 AM

- டில்லி சிறப்பு நிருபர் -: சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு வழங்கியுள்ளது.
இவருடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜராகும் ஐந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முக்கிய சட்ட விவகாரங்களை கையாள்வதில் முதன்மைப் பங்கு வகிக்கும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிகிறது.
இந்நிலையில், அவரது சிறப்பான பணிகளை கருத்தில் கொண்டு, வரும் ஜூலை 1- முதல் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ல் சொலிசிட்டர் ஜெனரலாக அவர் நியமிக்கப்பட்டார். இந்த, மூன்று ஆண்டுகள் நீட்டிப்பின் மூலம், அவர் மொத்தம் 11 ஆண்டுகள் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றி, மிக நீண்ட காலம் இப்பதவியில் நீடித்தவர்களில் ஒருவர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, ஐந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களின் பதவிக்காலத்தையும் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒப்புதல் அளித்துள்ளது.
விக்ரம்ஜித் பானர்ஜி, கே.எம். நடராஜ், சூரியபிரகாஷ் வி. ராஜு, என். வெங்கடராமன், ஐஸ்வர்யா பதி ஆகியோருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, டில்லி உயர் நீதிமன்றத்திற்கான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றி வரும் சேத்தன் சர்மாவின் பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
