லடாக்கில் போராட்டம் நடத்தியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
லடாக்கில் போராட்டம் நடத்தியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
ADDED : செப் 27, 2025 06:19 AM

புதுடில்லி : லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
இதே கருத்தை வலியுறுத்தி, காலநிலை ஆர்வலரும், கல்வியாளருமான சோனம் வாங்சூக், கடந்த 10ல் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். இதற்கு ஆதரவாக, லடாக் முழுதும் கடந்த 24ல் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
வன்முறையாக மாறிய இந்த போராட்டத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, தன் உண்ணாவிரதப் போராட்டத்தை வாங்சூக் முடித்துக் கொண்டார்.
லடாக்கில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு வாங்சூக் தான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியது. அவரின் தொண்டு நிறுவனத்துக்கான வெளிநாட்டு நிதி பெறும் பதிவையும் ரத்து செய்தது.
ஆனால், வன்முறைக்கு தான் பலியாக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். எப்போது கைது செய்யப்பட்டாலும் மகிழ்ச்சியே என்றும் வாங்சூக் கூறி இருந்தார். இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாங்சூக் நேற்று கைது செய்யப்பட்டார்.
பத்திரிகையாளர்களை அவர் சந்திக்க இருந்த நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர். போராட்டக்காரர்களைத் துாண்டியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
வாங்சூக் கைதுக்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.