நேரு மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் ஆறவில்லை: அசாமில் பிரதமர் மோடி பேச்சு
நேரு மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் ஆறவில்லை: அசாமில் பிரதமர் மோடி பேச்சு
ADDED : செப் 14, 2025 02:38 PM

கவுகாத்தி: ''1962ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது ஜவஹர்லால் நேரு அசாம் மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை'' என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
அசாம் மாநிலத்தில் ரூ.18,530 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தாராங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: இந்தியாவில் வேகமாக வளரும் மாநிலங்களில் அசாமும் ஒன்று; ஒரு காலத்தில் வளர்ச்சிக்காக போராடிய இந்த மாநிலம் இன்று 13% வளர்ச்சியைக் கொண்டுள்ளது. பாரத ரத்னா விருது பெற்றவரும், புகழ்பெற்ற பாடகரும், இசையமைப்பாளருமான பூபன் ஹசாரிகாவை காங்கிரஸ் அவமதித்ததில் நான் வேதனை அடைகிறேன்.
வளர்ச்சி
பூபன் ஹசாரிகா போன்ற அசாமின் சிறந்த மகன்களின் கனவுகளை நனவாக்க பாஜவின் இரட்டை இன்ஜின் அரசு உறுதி பூண்டுள்ளது. ஆசிர்வாதத்தால் ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றது. 1962ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது ஜவஹர்லால் நேரு அசாம் மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை. அசாம் மாநிலத்தின் கலாசாரத்தை பாதுகாக்கவும், வளர்ச்சியை உறுதி செய்யவும் பாஜ அரசு முடிவு செய்து இருக்கிறது.
ஆறு பாலங்கள்
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை அடைவதில் வடகிழக்கு மாநிலங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. காங்கிரஸ் பல தசாப்தங்களாக அசாமில் ஆட்சி செய்தது. ஆனால் பிரம்மபுத்ரா நதியின் மீது 3 பாலங்களை மட்டுமே கட்டியது, அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் ஆறு பாலங்களைக் கட்டினோம்.
தேசவிரோத சக்தி
உங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காக 'சுதேசி' பொருட்களை (இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்) வாங்குங்கள். இந்திய ராணுவத்தை ஆதரிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.