ஜெகன் மோகன் ரெட்டி ஒரு 'சைக்கோ' ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா சர்ச்சை
ஜெகன் மோகன் ரெட்டி ஒரு 'சைக்கோ' ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா சர்ச்சை
ADDED : செப் 27, 2025 12:11 AM

அமராவதி : ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, ஆளும் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,வும், பிரபல நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா, 'சைக்கோ' என சட்டசபையில் குறிப்பிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
அதிருப்தி சட்டசபையில் நேற்று முன்தினம், பா.ஜ., - எம்.எல்.ஏ., காமினேனி ஸ்ரீனிவாஸ் பேசுகையில், “முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர்.
''ஆனால், அவர்களை சந்திக்க ஜெகன் மோகன் நேரமே ஒதுக்கவில்லை. மெகா ஸ்டார் சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின்னரே, அவர் நேரம் ஒதுக்கினார்,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஆளும் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,வும், பிரபல தெலுங்கு நடிகரும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனருமான நந்தமூரி பாலகிருஷ்ணா, “தெலுங்கு நடிகர்கள் ஒரு 'சைக்கோ'வை சந்திக்க சென்றனர்,” என, ஜெகன் மோகன் ரெட்டியை குறிப்பிட்டார்.
மேலும், “சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின் தான், தெலுங்கு நடிகர்களை ஜெ கன் மோகன் சந்திக்க வந்ததாகக் கூறுவது பொய்,” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், தொழில் துறை தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்க திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் அழைப்பிதழில், தன் பெயரை ஒன்பதாவது இடத்தில் சேர்த்ததற்காக, கூட்டணி கட்சியான ஜனசேனாவைச் சேர்ந்த திரைத்துறை விவகார அமைச்சர் கந்துலா துர்கேஷ் மீதும் அதிருப்தி தெரிவித்தார்.
பிரச்னை நடிகர் சிரஞ்சீவி கூறுகையில், “ஜெகன் மோகன் அழைப்பின்படியே அவரது வீட்டுக்குச் சென்றோம். தெலுங்கு திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அவரிடம் விளக்கினோம். கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்து பேர் மட்டுமே வர அறிவுறுத்தப்பட்டது.
''பின், எங்கள் கோரிக்கையை ஏற்று, 10 பேரை சந்திக்க ஜெகன் மோகன் ஒப்புக்கொண்டார். இந்த குழுவில் சேர பாலகிருஷ்ணாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் முடியவில்லை. ஜெகன் மோகன் முயற்சியால், சினிமா டிக்கெட் வி லை அதிகரிக்கப்பட்டது, ” என்றார்.
பாலகிருஷ்ணா தான் உண்மையான சைக்கோ. அத்தகைய நடத்தையில் அவரை யாரும் மிஞ்ச முடியாது. பெல்லம்கொண்டா சுரேஷ் துப்பாக்கிச்சூடு வழக்கில் மனநலச் சான்றிதழ் பெற்ற அவர், ஜெகன் மோகனை சைக்கோ என அழைப்பது நகைப்புக்குரியது. கூட்டணி அரசில் ஓரங்கட்டப்பட்டதால், பாலகிருஷ்ணா விரக்தியில் இப்படி பேசியிருக்கலாம். ஜூபுடி பிரபாகர் பொதுச்செயலர், ஒய்.எஸ்.ஆர்.காங்.,