ADDED : ஜூன் 14, 2026 08:37 PM

திரிச்சூர்: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக தவறான நோக்கம் கொண்ட பிரசாரம் செய்யப்படுகிறது என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
திரிச்சூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் இசை உண்டு. பாரதிய ராகங்கள் அடிப்படையிலான அந்த குழுக்கள், இசை அமைக்கும். தனித்தனியாகவும், குழுவாகவும் பாடல் பாடுவோம். ஆனால், நாங்கள் அகில இந்திய இசை கிளப் கிடையாது. வெளித்தோற்றம் ஒரு மாறுபட்ட எண்ணத்தை ஏற்படுத்தலாம். இவை எங்கள் செயல்பாடுகள் என்றாலும் அவை எங்களின் குறிக்கோள் அல்ல. நோக்கத்தை அடைவதற்கு அவை உதவி செய்கின்றன.
ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எனவே மக்களை அணுகி, 100 ஆ ண்டு பழமையான ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து எடுத்துரைக்க வேண்டும். இந்தப் பெயர் பிரபலமானது. உலகின் எந்த மூலையிலும் ஆர்எஸ்எஸ் என்று குறிப்பிட்டால், அது பாரதத்தின் ஒரு இயக்கம். ஒரு செயல்பாடு அல்லது ஒரு அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆர்எஸ்எஸ் குறித்து பல தவறான புரிதல்கள் உள்ளன. உலகிலேயே மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அமைப்பு ஆர்எஸ்எஸ் ஆகும். எனவே, பொது மக்களின் மனதில் தேவையற்ற அச்சம் நிலவுகிறது. தவறான நோக்கம் கொண்ட பிரசாரமே இதற்கு காரணம். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
