வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு கால நிர்ணயம் செய்வது வரம்புமீறல் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் வாதம்
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு கால நிர்ணயம் செய்வது வரம்புமீறல் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் வாதம்
UPDATED : செப் 14, 2025 07:56 AM
ADDED : செப் 14, 2025 12:10 AM

புதுடில்லி: 'நாடு முழுதும் வழக்கமான இடைவெளியில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கான எந்த உத்தரவும், தேர்தல் கமிஷனின் பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாகும்' என, தேர்தல் கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பீஹாரில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.
இதனால், தகுதியான வாக்காளர்கள் நீக்கப் பட்டதாகவும், பா.ஜ., வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ள தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது. இது தொடர்பாக, தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், நாடு முழுதுமான பணி அடுத்த மாதம் துவங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட இடைவெளியில் நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நடத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதிலளித்து, தேர்தல் கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வாக்காளர் பட்டியலை சுருக்கமாக திருத்துவது அல்லது தீவிர திருத்தத்தை மேற்கொள்வது என்பது தேர்தல் கமிஷனின் விருப்பத்துக்கு உட்பட்டது. இதில், உச்ச நீதிமன்றம் உட்பட எந்த அமைப்பும் தலையிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் - 1950 மற்றும் தேர் தல் பதிவு விதிகள் - 1960 ஆகியவற்றின்படி, இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும் என வரையறுக்கப்படவில்லை. எந்த ஒரு தொகுதியின் அல்லது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலையும் பொருத்தமான காலத்தில் திருத்தம் செய்ய, தேர்தல் கமிஷனுக்கு சட்டம் அதிகாரத்தை வழங்கியுள்ளது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத் தரவிடுவது, தேர்தல் கமிஷனின் பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாகும். வாக்காளர் பட்டியலை முறையாக பராமரிக்க வேண்டிய சட்டப்பூர்வமான கடமையை, தேர்தல் கமிஷன் முழுமையாக அறிந்துள்ளது.
வரும் 2026 ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கையை துவக்குமாறு, அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.
இந்த பணியை மேலும் வலுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டையும் தேர்தல் கமிஷன் கூட்டியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.