ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
UPDATED : செப் 16, 2025 01:00 PM
ADDED : செப் 16, 2025 12:04 PM

புதுடில்லி: ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக, செப்டம்பர் 22ம் தேதி நேரில் ஆஜர் ஆகுமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
ஆன்லைன் சூதாட்ட செயலிகள் வாயிலாக சட்டவிரோதமாக, 2,000 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 'பாரிமேட்ச்' என்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு பணமோசடி நடந்ததாக விசாரணை நடந்து வருகிறது.
ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி , பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த வழக்கில், இன்று (செப் 16) முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ''செப் 22ம் தேதி டில்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராக வேண்டும்'' என நோட்டீசில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
அதேபோல் இந்த வழக்கில் செப் 23ம் தேதி நேரில் ஆஜர் ஆகுமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.