டில்லியில் போலீசார் என்கவுன்டர்: பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொலை
டில்லியில் போலீசார் என்கவுன்டர்: பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொலை
ADDED : செப் 20, 2025 08:38 AM

புதுடில்லி: டில்லியில் இன்று அதிகாலை பிரபல ரவுடி கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
தலைநகர் டில்லியில் பிரபல ரவுடி ஜிதேந்தர் மன் கோகி என்ற கும்பலுக்கும், மற்றொரு ரவுடியான டில்லு தாஜ்புரியா கும்பலுக்கும் இடையே தீராத பகை உண்டு. இரு கும்பலைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது பொது இடங்களில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறியது உண்டு.
இந்த இரண்டு கும்பலைச் சேர்ந்தவர்களை பிடிக்கும் முயற்சியில் டில்லி போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், டில்லியின் ரோகிணி காவல்துறை சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் மர்ம நபர்கள் சில பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் பிரபல ரவுடி ஜிதேந்தர் மன் கோகி கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதால் போலீசார் அங்கு சென்றனர். ரவுடி கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மர்ம நபர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார், 2 பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். ஆயுதங்களுடன் 3 பேரை கைது செய்தனர். 2 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் இறங்கி இருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பெயர்கள் இர்பான், நிலேஷ் மற்றும் லாலு என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் சிக்கியவர்கள் பிரபல ரவுடி ஜிதேந்தர் மன் கோகி என்பவனின் கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. சம்பவ பகுதி முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தப்பியோடியவர்களை தேடி வருவதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.