தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


ADDED : மே 31, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சொல்கிறார்கள்/ 01/06/26 திங்கள் இதழ்

--------––––––––

நாணயம் விகடன், ஏப்., 05. 2026 பக்:46

அம்மாவின்

நிதி மேலாண்மையால்

நிம்மதி, மகிழ்ச்சி!

––––––––––––

அம்மாவின் சிறப்பான நிதி நிர்வாகம் குறித்து கூறும், தஞ்சை மாவட்டம், கபிஸ்தலத்தை சேர்ந்த ஆர்.ரவிவர்மன்:

அப்பா ராணுவ பணியில் இருந்தவர் என்பதால், வீட்டு நிர்வாகம் முழுதையும் அம்மா தான் கவனித்துக் கொண்டார். அப்பா அனுப்பும் பணத்தை வீண் செலவு செய்து விடக்கூடாது என்பதற்காக, அம்மா பின்பற்றிய ஒவ்வொரு விஷயமும், எங்களுக்கு நிதி பாடங்கள். மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தியதால், அம்மா தான் எங்களுக்கு வழிகாட்டி.

சிக்கனமாக இருந்தாலும் எங்களின் அடிப்படை தேவைகளுக்கோ, கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கோ எவ்வித குறையும் வைத்தது கிடையாது. நாங்கள் மேற்படிப்புக்கு சென்ற போது செலவுகள் அதிகரித்தன. ‘செலவுகள் அதிகரிக்கும்போது, வருமானத்தை அதிகரிக்க வேண்டும்’ என்பார் அம்மா.

அதற்காக, வங்கிக்கடன் வாயிலாக பசு மாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். தரமான பால் விற்பனையால் ஓரளவு வருமானம் வர ஆரம்பித்தது. அப்பா அனுப்பும் பணம் மற்றும் பால் விற்பனை என இரட்டை வருமானம் இருந்ததால், சேமிப்பும் உயர்ந்தது.

ஓரளவுக்கு பணம் சேர்ந்து விட்டால், அம்மா அதை அப்படியே வைத்திருக்க மாட்டார். அதற்கு அவர் கூறும் காரணம், ‘பணமாக சேமித்தால் நாளுக்கு நாள் அதன் மதிப்பு குறையும். ஆகவே அவசிய தேவைக்கான பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, மீதி பணத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிவிட வேண்டும்’ என்பார்.

தங்க நகைகள் முதல் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வரை அனைத்தையும் திட்டமிட்டு வாங்கினார். அப்படி அவர் சேர்த்த நகைகள் மற்றும் பொருட்களைத் தான் இன்றும் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். பணியில் இருந்து அப்பா ஓய்வு பெற்றதும், எல்.ஐ.சி., முகவர் ஆனார். அந்த வருமானத்தையும் அம்மாவிடம் கொடுத்து விடுவார்.

நாங்கள் குடியிருந்த வீடு போதுமானதாக இல்லை என்பதால், வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டலாம் என்று முடிவெடுத்தோம். ‘மாதாந்திர தவணை கட்ட வேண்டுமே’ என அப்பா மலைத்தார்.

அம்மா தான், ‘நம் வருமானமும் செலவுகளும் இவ்வளவு... கடனை தாராளமாக அடைக்கலாம்’ என்று விரிவாக எடுத்துக்கூறி, வீட்டுக்கடன் வாங்க உற்சாகமூட்டினார். அந்த தைரியத்தில் கடன் வாங்கி வீடு கட்டி குடியேறினோம். தற்போது வீட்டுக்கடனையும் முடித்து விட்டோம்.

கடந்த 50 ஆண்டுகளாக அம்மாவின் நிதி மேலாண்மை தான், எங்கள் குடும்பத்தை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வைக்கிறது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us