‘கோச்சிங் சென்டர்’ இயக்குநரை கடத்தி 2 கோடி ரூபாய் பறித்த 6 பேர் கைது
‘கோச்சிங் சென்டர்’ இயக்குநரை கடத்தி 2 கோடி ரூபாய் பறித்த 6 பேர் கைது
ADDED : மே 04, 2026 05:43 PM
போபால்: மத்திய பிரதேசத்தில், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தின் பெண் இயக்குநரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று, அவரிடமிருந்து, 1.89 கோடி ரூபாயை பறித்த முன்னாள் மாணவர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைநகர் டில்லியை தலைமையிடமாக வைத்து, ‘சுப்ரா ரஞ்சன் ஐ.ஏ.எஸ்., அகாடமி’ செயல்படுகிறது. இதன் பெண் இயக்குநரான சுப்ரா ரஞ்சனை, ம.பி., தலைநகர் போபாலில் புதிய கிளை தொடங்குவது குறித்தும், கருத்தரங்கு நடத்துவது குறித்தும் பேசுவதற்காக, ஏப்., 29ல், போபாலுக்கு வரும்படி முன்னாள் மாணவர் பிரியங்க் சர்மா அழைத்துள்ளார்.
அதன்படி, அவர் குறிப்பிட்ட வீட்டுக்கு சுப்ரா ரஞ்சன் சென்றார். அப்போது, அங்கிருந்த ஆயுதமேந்திய கும்பல் அவரை சிறை பிடித்ததோடு, கொலை மிரட்டல் விடுத்து, அவரது வங்கி கணக்கிலிருந்து பல்வேறு கணக்குகளுக்கு, 1.89 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்தது. இதன்பின், அவரை அந்த கும்பல் விடுவித்தது.
பாதிக்கப்பட்ட சுப்ரா ரஞ்சன், இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக அவரது வங்கிக் கணக்கை போலீசார் முடக்கினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரியங்க் சர்மா, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உடல்நலக்குறைவு எனக் கூறி, போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், கமிஷனர் சஞ்சய் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் மருத்துவமனையில் இருந்த அவரை கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளிகளான ரோஹித் மாளவியா, தீபக் பகத், விக்கி தஹியா, குணால் யாதவ், பங்கஜ் அஹிர்வார் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
