
ஏற்றுமதியாளர்கள் முழு வரிச்சலுகைமீண்டும் மார்ச் 31 வரை பெறலாம்
மேற்காசிய போரால், சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 'ரோட்டெப்' திட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர்களுக்கு முழுமையான வரிச்சலுகைகளை மத்திய அரசு மீண்டும் வழங்கியுள்ளது.ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி மற்றும் சுங்கத்தீர்வை
தள்ளுபடி என்ற இத்திட்டத்தின் சலுகைகள், கடந்த மாதம் பாதியாக குறைக்கப்பட்டன.
இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குறைக்கப்பட்ட இந்த சலுகைகள் பழைய விகிதத்திலேயே கடந்த பிப்ரவரி 23 முதல் வரும் மார்ச் 31ம் தேதி வரை மீண்டும் முழுமையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர்களுக்கு அதிகபட்சமாக 3.90 சதவீதம் வரை ரீபண்டுகள் வழங்கப்படுகிறது.
பாஷ் - டாடா ஆட்டோகாம்ப் கூட்டணியில் புது நிறுவனம்
மின்வாகன துறையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, பாஷ் நிறுவனமும், டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸும் இணைந்து புதிய கூட்டு நிறுவனத்தை துவக்க உள்ளன. இந்த புதிய கூட்டு நிறுவனத்தில் இரு நிறுவனங்களும் தலா 50 சதவீத பங்குகளை கொண்டிருக்கும். மின் வாகனங்களுக்கு தேவையான 'இ--ஆக்சில்' அமைப்புகள் மற்றும் மின் மோட்டார்களை இந்தியாவில் வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதில் இந்த புதிய நிறுவனம் கவனம் செலுத்தும். இதற்கான தலைமை அலுவலகம் மஹாராஷ்டிராவின் புனேவில் அமைய உள்ளது. ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலுக்கு உட்பட்டு, வரும் 2026ம் ஆண்டின் மத்தியில் இருந்து இந்த நிறுவனம் தனது செயல்பாடுகளை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஏசி' தயாரிக்க 'ஷார்ப்' முடிவு'ஆம்பர்' நிறுவனத்துடன் கூட்டு
ஜப்பானை சேர்ந்த ஷார்ப் கார்ப்பரேஷனின் இந்திய பிரிவான 'ஷார்ப் பிசினஸ் சிஸ்டம்ஸ்', நம் நாட்டில் 'ஏசி' தயாரிப்பை துவக்க ஆம்பர் என்டர்பிரைசஸுடன் கைகோர்த்து
உள்ளது. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 'ஏசி' சந்தைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
இதை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், ஆம்பர் என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே ஏசிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக ஷார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, தனது தயாரிப்பு பட்டியலை விரிவுபடுத்தவும், நாடு முழுதும் உள்ள தனது வினியோக கட்டமைப்பை வலுப்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குள் இந்திய 'ஏசி' சந்தையில் 2 - 3 சதவீத சந்தை பங்கை கைப்பற்ற அந்நிறுவனம் இலக்கு
நிர்ணயித்து உள்ளது.

