பெங்., - சென்னை விமானத்தில் திடீர் புகையால் பரபரப்பு
பெங்., - சென்னை விமானத்தில் திடீர் புகையால் பரபரப்பு
ADDED : மே 27, 2026 06:47 AM

பெங்களூரு: பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் புகை தென்பட்டதால், பயணியர் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர்.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை இண்டிகோ நிறுவனத்தின் விமானம், 230 பயணியருடன், புறப்படுவதற்காக ரன்வே நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென விமானத்திற்குள் புகை எழுந்ததால், பயணியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அவசர கதவு வழியாக பயணியர் கீழே இறக்கி விடப்பட்டனர்.
அத்துடன், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும், பாதுகாப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமானத்தில் ஏற்பட்ட புகை அணைக்கப்பட்டது.
உரிய நேரத்தில் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணியர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
இது குறித்து இண்டிகோ விமான நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
விமானம் புறப்படும் போது புகை எழுந்ததால், பயணியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானத்தில் இருந்த பயணியரை பத்திரமாக எங்கள் குழுவினர் கீழே இறக்கினர். பயணியர் தான் எங்களுக்கு முக்கியம். அவர்கள் வேறு விமானத்தில் செல்லும் வரை, அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
சில மணி நேரத்தில், மாற்று விமானம் ஏற்பாடு செய்து, பயணியர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
