/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு லீவு!: கர்நாடகாவில் கொரோனா பரவுவதால் திடீர் அறிவிப்பு
/
காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு லீவு!: கர்நாடகாவில் கொரோனா பரவுவதால் திடீர் அறிவிப்பு
காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு லீவு!: கர்நாடகாவில் கொரோனா பரவுவதால் திடீர் அறிவிப்பு
காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு லீவு!: கர்நாடகாவில் கொரோனா பரவுவதால் திடீர் அறிவிப்பு
ADDED : ஜூன் 01, 2025 06:47 AM

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பரவுகிறது. தனியார், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால் கட்டாய விடுப்பு வழங்கும்படி பள்ளி நிர்வாகங்களை சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர்.
இதுவரை, கொரோனா தொற்றுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பரவல் குறித்த அச்சம், மக்களிடையே எழுந்துள்ளது.
* பரிந்துரை
இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை பல அறிவுறுத்தல்கள், வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு வழங்கி உள்ளது. கடந்த 26ம் தேதி, கொரோனா தொற்று பரவல் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
அப்போது, விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யவும், மாவட்ட மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருக்கவும், கொரோனா குறித்த 'தனி ஹெல்ப் லைன்' அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டாய விடுப்பு வழங்கவேண்டும் என பரிந்துரைத்திருந்தார்.
* பரவும் அபாயம்
பரபரப்பான நிலையில், கோடை விடுமுறைக்குப் பின், மாநிலத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதால் பாதுகாப்பு வேண்டும் என்ற சூழல் உருவாகி உள்ளது.
இதற்காக மாநிலத்தில் உள்ள தனியார், அரசு பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை நேற்று சுகாதாரத்துறை ஆணையர் சிவகுமார் வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
* கட்டாய லீவு
பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தால், மாணவரின் பெற்றோருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவருக்கு கட்டாய விடுப்பு வழங்குவது அவசியம்.
பள்ளி வளாகம் துாய்மையாக இருக்க வேண்டும். பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள், ஊழியர்களிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயம் எடுக்க வேண்டும்.
இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், பெற்றோர் உடனடியாக தங்கள் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவர்களிடையே தொற்று பரவுவதை தடுக்க கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சுத்தமாக இருத்தல் போன்றவை கடைபிடிக்கப்பட வேண்டும். இதை பள்ளி நிர்வாகம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால் பள்ளிக்கு பெற்றோர் அனுப்பக்கூடாது. அவர்கள் முழுமையாக குணமடைந்த பிறகே, பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.