ADDED : மே 30, 2026 02:08 AM
சித்ரதுர்கா: சாலையில் செல்லும் போது, காரின் டயர் வெடித்து, லாரி மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில், ஐந்து நண்பர்கள் உயிரிழந்தனர்.
சித்ரதுர்கா மாவட்டம், மொல்காள்மூரு தாலுகாவின், துமகூர்லஹள்ளி கேட் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு வேகமாக கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் கார் முற்றிலுமாக சேதமடைந்தது.
காரில் இருந்த ராகவேந்திரா, 40, ருத்ரேஷ், 36, பிரமோத், 35, சோமசேகர், 35, மல்லிகார்ஜுன், 36, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இறந்த ஐவரும், சித்ரதுர்காவின் செல்லகெரேவை சேர்ந்தவர்கள். ராகவேந்திரா பிரபலமான போட்டோகிராபர். ஐவருமே நண்பர்கள்.
இது தொடர்பாக, தகவலறிந்து அங்கு வந்த மொல்காள்மூரு போலீசார், அப்பகுதியினர் உதவியுடன், காரில் இருந்த உடல்களை மீட்டனர்.
