ADDED : ஜூன் 02, 2026 01:25 AM

கலபுரகி: ''அனைத்து துறையிலும் மத்திய அரசு தோல்வி அடைந்து உள்ளது,'' என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நாட்டில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. விலைவாசி உயர்வு மக்களுக்கு பெரும் சுமையாக மாறி உள்ளது. நல்லாட்சி செய்ய தான் பா.ஜ.,வை மக்கள் ஆதரித்தனர்.
ஆனால் நாட்டு மக்களை பற்றி, மத்திய அரசுக்கு கவலை இல்லை. அனைத்து துறையிலும் தோல்வி அடைந்து உள்ளது. மக்கள் நம்பிக்கையை இழக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, வெறும் வார்த்தைகளால் சமாதானப்படுத்துகின்றனர்.
பா.ஜ., மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. வேலையின்மையும் நாளுக்கு, நாள் உயருகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் மத்திய அரசு பலவீனப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
