/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: வாழ்ந்திட உனக்கு தடை ஏது?
/
கவிதைச்சோலை: வாழ்ந்திட உனக்கு தடை ஏது?
PUBLISHED ON : ஏப் 05, 2026

விதைக்காமல் போனால்
அறுவடை ஏது?
உழைக்காமல் இருந்தால்
உயர்வென்பது ஏது?
பணிவு இல்லையேல்
பண்பு என்பதும் ஏது?
வியர்வை சிந்தாமல்
பெறும் வெற்றியும் ஏது?
உண்ணும் உணவில்
ஜாதிகள் ஏது?
சாதிக்க துடிப்போருக்கு
வேலிகள் ஏது?
கடல்நீர் ஆவியாகாமல்
போய்விடில் மழையும் ஏது?
மீண்டும் வந்து மண்ணில்
விழாவிடில் வளம் ஏது?
காற்று வந்து தீண்டாது போனால்
மலரின் வாசம் ஏது?
கொஞ்சி மகிழ்ந்திட தாய்க்கு
சேயின்றி வேறிங்கு ஏது?
சமத்துவம் இல்லையேல்
சரித்திரம் ஏது?
ஒற்றுமை இல்லையேல்
நற்பயன் என்பதும் ஏது?
தனிமரமாய் நின்றால்
தோப்பு எனும் சொல் ஏது?
இதை அறிந்திடில்
உனக்கு துயரங்கள் ஏது?
யாரோ நட்டு செல்லாவிடில்
இளைப்பாற நிழலும் ஏது?
நிழல் தரும் விருட்சமாய்
வாழ்ந்திட உனக்கு தடை ஏது?
ஊர் கூடி இழுக்காமல்
தேரோட்டம் ஏது?
பகுத்தறியா வாழ்வில்
நன்மைக்கு இடம் ஏது?
எதிர்காலம் உன் பெயரை
போற்றி புகழ்ந்திட
நல்லதை பூமிக்கு வழங்கிட
உன் மனதிற்கு இங்கே தடை ஏது?
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல், சிவகாசி. தொடர்புக்கு: 86750 14239

