/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஞானானந்தம்: அன்புக்காக ஏங்கும் இறைவன்!
/
ஞானானந்தம்: அன்புக்காக ஏங்கும் இறைவன்!
PUBLISHED ON : ஏப் 05, 2026

ஒரு சிறிய கிராமத்தில், பெட்டிக் கடை நடத்தி, வாழ்ந்து வந்தார், ஒருவர். அவர் தீவிர பக்தர். மனதில் எந்நேரமும் இறைவனின் திருநாமத்தை சொல்லி கொண்டே இருப்பார். அவர் நீண்ட நாட்களாக தன் கடையில் தன்னை அறியாமலேயே ஒரு புனிதமான சாளக்கிராமக் கல்லை தராசில் எடை போடுவதற்காகப் பயன்படுத்தி வந்தார். அந்த காலத்தில் தராசில் பொருட்களை எடை போட ஏதாவது ஒரு கல்லைத்தான் பயன்படுத்துவர். எடைக் கல்லாக பயன்பட்ட சாளக்கிராமக் கல், ஒரு தெய்வீக கல், அதில் இறைவன் வாசம் செய்கிறார். அதன் புனிதம் பற்றி அவருக்கு தெரியாது.
ஒரு நாள், பெட்டிக் கடை அருகே போய்க் கொண்டிருந்தார், அந்தணர் ஒருவர். எடைபோட தராசில் சாளக்கிராமக் கல்லை பெட்டிக் கடைக்காரர் பயன்படுத்துவதைக் கண்டார்.
'அந்தப் புனிதக் கல்லை, எடை போட ஏன் பயன்படுத்துகிறீர்கள்?' என்று கடைக்காரரிடம் கேட்டார்.
கடைக்காரர் களங்கமற்றவர். 'பொருட்களை எடை போட ஏதாவது ஒரு கல் தேவை, அதற்காக தான் இந்த கல்லை பயன்படுத்துகிறேன். சாளக்கிராமக் கல்லின் புனிதம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது...' என்று பதில் கூறினார்.
உடனே, 'சாளக்கிராமக் கல் புனிதமான ஒன்று. அதில் இறைவன் வாசம் செய்கிறார். மலர்கள் மற்றும் சந்தனம் போன்றவற்றை கொண்டு வழிபட வேண்டிய ஒன்று...' என்று அவருக்கு விளக்கி, அதை தன்னிடம் தரும்படிக் கேட்க, உடனடியாக, அந்தணரிடம் கொடுத்து விட்டார், கடைக்காரர்.
அதைத் தன் வீட்டுக்குக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து, விஸ்தாரமான சடங்குகளுடன் நைவேத்தியம் செய்து வழிபட்டார், அந்தணர். ஆனால், சாளக்கிராமக் கல்லில் வாசம் செய்த இறைவன், இந்த மாற்றத்தை விரும்பவில்லை. பெட்டிக் கடைக்காரர் அதை அன்புடனும், பக்தியுடனும் கையாண்டு வந்தார். ஆனால், அந்தணரின் வீட்டில் அத்தகைய உணர்வு இல்லை. அந்த அந்தணரின் அன்பில்லாத வழிபாட்டை இறைவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
எனவே, ஒரு நாள் சாளக்கிராம கல்லில் வாசம் செய்த இறைவன், அந்தணர் கனவில் தோன்றி, 'என்னை ஏன் இங்கே கொண்டு வந்தாய்? பெட்டிக் கடைக்காரர் உண்மையான பக்தர். அங்கு மகிழ்ச்சியாக இருந்தேன். அவர் எப்பொழுதும் என் புனித நாமங்களை பாடிக் கொண்டிருந்தார். அவர் இதயம் பக்தியால் நிறைந்திருந்தது. அவர் வாடிக்கையாளர்களுடன் பெரும்பாலும் என் புகழைத் தான் பேசிக் கொண்டிருப்பார். நீ, எனக்கு நிறைய நைவேத்தியம் செய்கிறாய். விஸ்தாரமாகப் பூஜை செய்கிறாய். ஆனால், உன் மனதில் அன்பும், பக்தியும் இல்லை. எனவே, எனக்கு இங்கு மகிழ்ச்சியே இல்லை. மீண்டும் அவரிடமே என்னை கொண்டுச் செல்...' என்று கூறியது.
இறைவன் கூறியபடியே, பெட்டிக் கடைக்காரரிடம், சாளக்கிராமக் கல்லை கொடுத்துவிட்டார், அந்தணர்.
உண்மையில்லாத வெறும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் நிறைந்த வழிபாட்டில் திருப்தி அடைவதில்லை, இறைவன். சுத்தமான இதயம், துாய பக்தி மற்றும் அன்பும், இருந்தால் மட்டுமே இறைவனைத் திருப்தி செய்ய முடியும்!
அருண் ராமதாசன்

