PUBLISHED ON : மே 31, 2026

பா கே
அலுவலகம்.
தேர்தல் முடிவு அறிவித்த அன்று, தமிழகத்தில், வீடுகளிலும், தெருக்களிலிருந்தும் எழுந்த விசில் சத்தம், காதை பதம் பார்த்து விட்டது. இன்னும், அந்த, 'கொய்ங்' என்ற ஒலி அதிர்வு ஓயவில்லை...' என்றபடி, வந்தமர்ந்தார், 'திண்ணை' நாராயணன்.
'ஓய்... நாணா, விசில் சத்தம் இப்போது மட்டுமல்ல, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், ஐ.பி.எல்., கிரிக்கெட் மேட்ச், நடைபெறும் போதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொண்டால் போதும்... பிரபல கிரிக்கெட் வீரர், எம்.எஸ்.தோனி, 'விசில் போடு...' என்று சொன்னாலும் சொன்னார், ரசிர்கர்கள், விசில் ஊதி காதை ஒரு வழியாக்கி விடுகின்றனர்...' என்றார், லென்ஸ் மாமா.
'நம் காதின் கேட்கும் திறன், சாதாரணமாக, 60-80 டெசிபல் அளவுதான். அதிகபட்சம், 110--130 டெசிபல் வரை தாங்கும். (நம் காதின் கேட்கும் திறனை அளவிடும் முறைக்கு, டெசிபல் அளவீடு என்று பெயர்.) அதற்கு மேல் போனால், காது ஜவ்வு கிழிந்து விடும். அதனால் தான், முதியவர்களால், அதிக சத்தத்தை தாங்க முடியாது; சமயத்தில், 'ஹார்ட் அட்டாக்' கூட வந்து விடும் என்கின்றனர்...' என்றார், அருகில் இருந்த மூத்த செய்தியாளர்.
'மனிதர்களாகிய நமக்கு மட்டும் தானா? அல்லது விலங்குகளுக்கு கூடவா?' என்றேன், நான்.
'விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் நம்மை போலவே, 60-70 டெசிபல் அளவு வரை தான் கேட்கும் திறன் இருக்குமாம். அதற்கு அதிகமாக போனால், அவைகளும் தடுமாறி விழுமாம். இதற்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமே உதாரணம்...' என்று கூற ஆரம்பித்தார், செய்தியாளர்:
உத்தரபிரதேசத்தின், சுல்தான்பூர் மாவட்டத்திலுள்ள, தார்யபூர் என்ற கிராமத்தில், கோழி பண்ணை வைத்திருக்கும், முகமது ஷபீர், தன் பண்ணையில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தார்.
சமீபத்தில், இந்த கோழி பண்ணையை ஒட்டிய சாலையில், திருமண ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. ஊர்வலத்தில், ஒரு வாகனத்தில், 'டிரம்ஸ்' போன்ற பெரிய பெரிய இசைக்கருவிகளை, பயங்கர சத்தத்துடன் இசைத்தபடி, பாடல்களை பாடியபடி சென்றுள்ளனர்.
இந்த பயங்கர சத்தத்தை கேட்ட கோழிகள் துடிதுடித்து உயிரிழந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பண்ணை உரிமையாளர், இசைக் குழுவினரை அணுகி, பாடல்களை நிறுத்தும்படி கேட்ட்டுள்ளார்.
ஆனால், அந்த இசைக் குழுவினரோ, அதை அலட்சியம் செய்து, மேலும் அதிக சத்தத்துடன் இசை பாடல்களை ஒலிக்க விட்டபடி சென்றுள்ளனர்.
அதிக சத்தத்தை தாங்க முடியாமல், கோழிகள் இறந்துவிட்டதாக, போலீசில் புகார் அளித்து விட்டார், பண்ணை உரிமையாளர். கோழிகள் இறந்ததற்காக, 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், இசைக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
போலீசார், சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து நிலைமையை ஆராய்ந்து, இசைக்குழு உரிமையாளரிடம் விசாரிக்க, முதலில் நஷ்ட ஈடு தருவதாக ஒப்புக் கொண்டவர், பிறகு தலைமறைவாகி விட்டார்.
சம்பவம் நடந்த மறுநாள், கோழிப் பண்ணைக்கு சென்ற கால்நடை மருத்துவக்குழு, இறந்த கோழிகளை உடற்கூராய்வு சோதனைக்கு உட்படுத்தினர். இதில், மாரடைப்பு ஏற்பட்டு தான், கோழிகள் இறந்தது உறுதியானது.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த இசைக்குழு உரிமையாளரை தேடிக் கண்டுபிடித்து, கைது செய்தனர். அவரது இசை ஒலிபரப்பும் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சுல்தான்பூர் மாவட்டத்தில் இருந்த பல இசைக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர், போலீசார்.
அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை தாண்டி, இசை மற்றும் பாடல்களை ஒலிபரப்பக்கூடாது; இரவு 10:00 மணிக்கு மேல் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலோ, விழாக்களிலோ பாட்டு கச்சேரி நடத்தக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளனர்.
இப்போது சொல்லுங்கள். அதிக ஒலியால் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நிரூபணமாகிவிட்டது தானே... என்று கூறி முடித்தார், செய்தியாளர்.
'அதிக ஒலியால், காது செவிடாகி விடும் என்ற உண்மையை நம் முன்னோர்களும் அறிந்திருக்கின்றனர். அதனால் தான் பலமாக இடி இடிக்கும் போது, காதைப் பொத்திக்கொண்டு, 'அர்ஜுனா, அர்ஜுனா...' என்று சத்தமாக சொல்ல வேண்டும் என்றிருக்கின்றனர்...' என்றேன், நான்.
'உண்மை தான், மணி... இப்படி சத்தமாக வாய்விட்டு சொல்லும்போது, காதினுள் பாயும் ஒலி, தடுக்கப்பட்டு, ஜவ்வு கிழியாமல் பாதுகாக்கும் என்ற அறிவியல் உண்மையை, அந்த காலத்திலேயே அறிந்து வைத்துள்ளனர். அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களின், 'ஹாரன்' சத்தத்தை தொடர்ந்து கேட்டாலும், காது மந்தமாகி விடும் என்று ஏற்கனவே எச்சரித்துள்ளனர், விஞ்ஞானிகள்...' என்றார், நாராயணன்.
ஒளி, ஒலி எதுவாக இருந்தாலும் அளவோடு இருந்தால், நம்மையும் காப்பாற்றிக் கொள்ளலாம், மற்ற உயிரினங்களும் காப்பாற்றப்படும் என்று நினைத்துக் கொண்டேன், நான்.
ப
விடியற்காலையில், ஒரு பஸ் வேகமாக போய்கொண்டிருந்தது. அந்த பஸ்சில், ஆன்மிக சொற்பொழிவு ஆற்றும் ஒரு பெரியவரும் பயணம் செய்து கொண்டிருந்தார். திடீரென, அந்த பஸ் ஒரு ஆற்றில் விழுந்து, மூழ்கிப்போனது.
அந்த பஸ்ஸை ஓட்டினவர் சொர்க்கத்துக்கு போனார். அதில் பயணம் செய்த, ஆன்மிக பெரியவர் நரகத்துக்கு போய் விட்டார். ஏன் இப்படின்னு யாருக்கும் புரியலே.
அந்த பெரியவரே, பொறுக்க முடியாமல் கடவுளிடம் முறையிட்டார்...
'கடவுளே, இது என்ன அநியாயம்? நான் காலம் பூராவும் மக்களுக்கு, தெய்வீக பிரசாரம் பண்ணிக்கிட்டிருந்தேன். என்னாலே தான் பல பேரு உங்களை நினைக்கிறாங்க. அப்படி இருக்கறப்போ, என்னை நரகத்துக்கு அனுப்பிட்டீங்க. அந்த ஆளு, 'தண்ணி' போட்டுட்டு வண்டியை ஓட்டி, கவுத்துப்புட்டாரு. அவரை சொர்க்கத்துக்கு அனுப்பிட்டீங்களே...' என்றார்.
அதற்கு, 'அப்படி இல்லேப்பா. நீ பிரசாரம் பண்றப்போதெல்லாம் ஜனங்க கவலையே இல்லாம கண்ணை மூடி துாங்கிக்கிட்டிருப்பாங்க. ஆனால், அந்த ஆளு வண்டி ஓட்டறப்பெல்லாம், அதுலே பயணம் பண்ணினவங்க அத்தனை பேரும் என்னையே பிரார்த்தனை பண்ணிக்கிட்டிருப்பாங்க.
'உன்னைவிட, அவரு தான் மக்களுக்கு அடிக்கடி என் ஞாபகத்தை உண்டாக்கினவர். அதனாலே தான் இப்படி பண்ணினேன்...' என்று பதில் கூறினார், கடவுள்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
