PUBLISHED ON : மே 10, 2026

பா - கே
மாநில அரசு பணியில் இருக்கும், நண்பர் அவர். அவ்வப்போது, நம் இதழுக்கு, கட்டுரைகளும் எழுதுவார். கடமை தவறாத, நேர்மையான அதிகாரி. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். அதனாலேயே, மற்றவர்களால், ஒதுக்கப்பட்டிருப்பவர். அவர் சார்ந்த துறை சம்பந்தமாக, யாருக்காவது உதவி தேவைப்பட்டால், நியாயமான முறையில் செய்து தருவார். லென்ஸ் மாமாவுக்கும், இரண்டு மூன்று முறை அரசு சம்பந்தமான வேலைகளை முடித்து கொடுத்துள்ளார். அன்று, அலுவலகம் வந்திருந்தவர் முகத்தில் மலர்ச்சி இல்லாமல் இருந்தது. இதைக் கவனித்த, லென்ஸ் மாமா, 'என்ன ஓய்... முகத்தில் சுரத்தே காணவில்லை...
அலுவலகத்தில் ஏதாவது பிரச்னையா?' என்றார். 'அதெல்லாம் ஒண்ணுமில்லை. 'ரிட்டையர்' ஆக இன்னும் மூணு மாசம் தான் இருக்கிறது. இதுவரை வேலை, குடும்பம் என்று இருந்து விட்டேன். பசங்களும் படித்து முடித்து, வெளிநாட்டில், 'செட்டில்' ஆகிவிட்டனர். ஓய்வுக்கு பின் மீதி உள்ள நாட்களை எப்படி போக்குவது என்ற கவலை வந்துவிட்டது...' என்றார், நண்பர். 'உமக்குத்தான் எழுதும் திறன் உள்ளதே. எழுத்து பணியைத் தொடரலாமே...' என்றேன், நான்.
'நீ சொல்வது சரி தான், மணி... ஆனால், கதை, கவிதை எழுத எனக்கு வராது. நாட்டில், அவ்வப்போது பரபரப்பாக பேசப்படும் தலையாய பிரச்னை பற்றி, உரத்த சிந்தனை, சிந்தனை களம் போன்ற தலைப்பில், அதுபற்றி கட்டுரை எழுதுவேன். அவ்வளவு தான்!' என்றார். 'ஓய்... இதுக்குத்தான் வயசு காலத்திலேயே நிறைய நண்பர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ளணும். அவர்களோடு பேசி பழக, ஊர் சுற்ற பொழுது போயிடும்.
உம்மை போல், வேலையே பிரதானம் என்று இருப்பவர்கள் தான், பணி ஓய்வுக்கு பின், பொழுது போகாமல், மன அழுத்தத்துக்கு ஆளாவர். 'வயதான பிறகு வரும் தனிமை ஒரு பக்கம் இருந்தாலும், தற்சமயம் மொபைல் போன், இன்டர்நெட் என, தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது அதிகமாகி விட்டது. சக மனிதர்களுடன் நட்பு கொள்வது மிகவும் குறைந்து விட்டதாக, 'ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ' என்ற பத்திரிகை, சமீபத்தில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது.
'அதில், நட்புறவு பற்றிய ஆராய்ச்சியின் முக்கிய கூறுகள், இடம் பெற்றுள்ளன...' என்று கூறி, சற்று நிறுத்தியவர், 'உமக்கு நேரம் இருக்குமா, சொல்லட்டுமா?' என்று கேட்டார், லென்ஸ் மாமா. 'தாராளமா சொல்லலாம்...' என்று, நண்பர் கூறியதும், கூற ஆரம்பித்தார், மாமா: கடந்த, ஐந்தாண்டுகளில் மனிதர்கள், சக மனிதர்களுடன் நட்புக் கொள்வது மிகவும் குறைந்துள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகளவில், 'எனக்கு மனதுக்கு நெருக்கமான நண்பர்கள் யாருமில்லை...' என்று தெரிவிப்பவர்கள், 12 சதவீதம் பேர் அதிகரித்திருக் கின்றனர். 'பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நண்பர்கள் குழு என்னிடம் உண்டு...' என்று சொல்பவர்கள், மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டனர்.
கிராமங்களிலும் கூட, இதே நிலை தான் நீடிக்கிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கூட்டங்களில் கூட, தனித்தே இருப்பவர்களும், பிறருடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமலிருப்பவர்களும் மிகவும் அதிகரித்திருக்கின்றனர். தனிமை விரும்பிகளின் சதவீதம், 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், நட்புக் கொள்வது பற்றி புதிதாக ஒரு பாட பிரிவை துவங்கியுள்ளதாகவும், அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இது, பண்பாட்டுக் கூறுகளையே பாதிக்கக்கூடிய விஷயம். சக மனிதருடன் நட்பு பாராட்டுவது வெறும் மனநிலை சார்ந்தது மட்டுமல்ல... சிறந்த பண்பாடும் கூட. மேலும், நட்புணர்வு தான் ஜாதி, மதம், இனம் போன்றவற்றை பின் தள்ளி, மனிதாபிமானத்தை முன்னெடுத்து செல்லக்கூடியது.
நல்ல நட்பு, மன அழுத்தத்தைக் குறைத்து, குறைகள் களைந்து வாழச் செய்கிறது. நண்பர்களுடன் இருப்பது மனநலத்துக்கும், உடல் நலத்துக்கும் வலுவூட்டுகிறது என்று கூறுகின்றனர், மனநல மருத்துவர்கள். குறிப்பாக, முதியவர்களுக்கு, நட்பும், அன்பும், அக்கறையும் நண்பர்களிடமே சுயநலமின்றி கிடைக்கிறது. அது, அவர்களின் வாழ்நாளை நீட்டிக்கவும் செய்கிறது.
மொபைல்போன் என்ற சிறு கருவிக்குள் அடைபட்டுக் கிடக்கும், மனிதன், ரீல்ஸ், வீடியோக்கள், தேவையற்று வந்து நிரப்பும் குப்பைச் செய்திகள், அளவுக்கதிகமான விளம்பரங்கள், மனதைக் கெடுக்கும் மாயப் பேச்சுக்கள் என, பலவற்றில் மனதைச் செலுத்தி, நட்பை மறந்து விட்டிருப்பது நிஜம். இனிமையாக சிரித்து பேசி, தோள்கொடுக்கும் ஒரு தோழன் இருப்பின், மேற்கண்ட கழிவுகளை நாட, மனம் வராது.
தனிமை, பல நோய்களுக்கு வழி வகுக்கிறது. நட்பு, நோய்களைப் போக்கி, ஆரோக்கியத்தை தருகிறது. மனநலத்திற்கு வழி செய்வதன் மூலம், உடல் நலத்திற்கும் நன்மை சேர்க்கிறது.
எண்ணங்களை பகிரவும், அன்பைத் தெரிவிக்கவும், பிரச்னைகளுக்கு ஆறுதல் சொல்லி வழிகாட்டவும் நண்பர்கள் அவசியம் தேவை.
பேதங்கள் குறைந்து, சமுதாயம் சமநிலை பெற, நட்பு மிகவும் முக்கியம்.
- இப்படி கூறி முடித்தார், லென்ஸ் மாமா. இதைக் கேட்டதும், நண்பர் முகத்தில் ஒரு தெளிவு வந்தது போலிருந்தது. 'தினமும், 'வாக்கிங்' போகும்போது, அங்கு வருபவர்களுடன் பேசி, நட்பை ஏற்படுத்திக் கொள்கிறேன்...' என்று கூறி, விடைபெற்றார், நண்பர்.
ப
அந்தக் காலத்தில், சென்னை பாண்டி பஜாரில் மிகப்பெரிய ஹோட்டல் இருந்தது. அந்த ஹோட்டலில் தினமும் கொஞ்ச சாப்பாட்டு டோக்கன்களை வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு வந்து விடுவார், நடிகர், என்.எஸ்.கிருஷ்ணன். பசியோடு யாசகம் கேட்டு, யாராவது வந்தால், இந்த டோக்கனைக் கொடுத்து, அந்த ஹோட்டலில் போய் சாப்பிடச் சொல்வார்.
ஒரு முறை, அந்த ஹோட்டல் முதலாளி, 'எதற்காக இப்படி பஞ்ச பரதேசிகளையெல்லாம் என் ஹோட்டலுக்கு சாப்பிட அனுப்புகிறீர்கள்...' என, கோபத்தோடு கேட்டார்.
'அதற்கு தானே நீங்கள் ஹோட்டல் நடத்துகிறீர்கள். நான் தான் பணம் கொடுத்து விட்டேனே. ஆடு, மாடுகளையா சாப்பிட அனுப்பினேன். மனிதர்களை தானே அனுப்பியிருக்கிறேன். ஒழுங்காக அவர்களுக்கு சாப்பாடு போடுங்க...' என்று சொல்லிவிட்டார், என்.எஸ்.கிருஷ்ணன்.
அதுமட்டுமில்லாமல், 25 ஆண்டுகள் தன் டிரைவர் விபத்தில்லாமல் கார் ஓட்டியதற்காக, சென்னை வாணி மஹாலில் அந்த டிரைவருக்கு பாரட்டு விழா நடத்தி, 25 சவரன் தங்க நகைகளையும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் கொடுத்து கவுரவப்படுத்தினார்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
