sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

'இ ன்டர்நெட்'டில், எதையோ மேய்ந்து கொண்டிருந்த, லென்ஸ் மாமா திடீரென, 'கருணைக்கொலை செய்வது ஏற்புடையதா, இல்லையா என்பது குறித்து, நீண்ட காலமாக விவாதம் நடந்து வருகிறது அல்லவா? உச்ச நீதிமன்றமும் பல கருத்துக்களை அவ்வப்போது சொல்லி வருகிறது...' என்று, தலை, வால் புரியாமல் முணுமுணுத்தார். அருகில் இருந்த, 'திண்ணை' நாராயணன், 'இதுவே நான் ஏதாவது சொல்லியிருந்தால், இன்னேரம் என்னை, கிழி கிழி என்று கிழித்திருப்பீர்...' என்று கடுகடுத்தார். 'ஓய்... எப்படா, சான்ஸ் கிடைக்கும், போட்டி போடலாம் என்று இருக்கிறீரா? இந்த நியூசை படித்து பாருங்கள். எவ்வளவு பயனுள்ளதுன்னு உமக்கே தெரியும்...' என்று பதிலுக்கு எகிறினார், மாமா. இவர்கள் இப்படி வார்த்தை போரில் ஈடுபட்டிருக்க, நான், லென்ஸ் மாமாவின் கம்ப்யூட்டரை, என் பக்கம் திருப்பி, அவர் படித்துக் கொண்டிருந்த செய்தியை பார்வையிட்டேன். அதில், ஹரியானா அரசு கருணை கொலைக்கு அனுமதித்த செய்தி இருந்தது. அதன் சுருக்கம் இது: எல்லாம் நல்லபடியாக இருக்கும் வரை பிரச்னை இல்லை. மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகி, தொடர்ச்சியான சிகிச்சை, ஏகப்பட்ட டெஸ்டுகள், இனி குணமடையாது என்ற நிலை தொடரும்போது, செலவு ஒரு பக்கம், குடும்பத்தினரின் அலைச்சல் மற்றும் வெறுப்பு, மனக்கஷ்டம் இன்னொரு புறம் அலைக்கழிக்க, படுக்கையில் இருப்பவர் சீக்கிரம் போய் சேர்ந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விடுவர்.

இப்படிப்பட்டவர்களுக்காக, சாகும் உரிமையை அனுமதித்துள்ளது, ஹரியானா மாநில அரசு.

குணமே ஆகாத நோயாளிகள், கண்ணியத்துடன் இறக்கும் உரிமையை பயன்படுத்த இந்த சட்டம் உதவுகிறது.

ஜனவரி, 2023ல், கண்ணியத்துடன் இறக்கும் உரிமையை அங்கீகரித்திருந்தது, உச்ச நீதிமன்றம். இதனால், மரணமடைந்து கொண்டிருக்கும் நோயாளிகளின் சிகிச்சையை நிறுத்தலாம்.

'காமன்காஸ் வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா' என்ற தலைப்பில், ஹரியானா மாநிலத்தின் அனைத்து சிவில் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும், இந்த ஆணையை அனுப்பியுள்ளது, அம்மாநில சுகாதாரத்துறை.

மருத்துவ சிகிச்சையை நிறுத்தி வைப்பது அல்லது திரும்பப் பெறுவது எந்த சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்படலாம் என்பது தொடர்பான முடிவையும் இது, தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

ஒரு நோயாளி, சாகும் உரிமை பத்திரத்தைப் பதிவு செய்யும் போது, தன் பாதுகாவலர் மற்றும் நெருங்கிய உறவினர் பெயர்களை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

அந்த பாதுகாவலர் அல்லது நெருங்கிய உறவினரும், பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். மேலும், உயர் அதிகாரி ஒருவரின் கையெழுத்தும் கட்டாயம் பெறப்பட வேண்டும்.

முன்கூட்டியே எழுதியது மற்றும் சமீபத்தில் எழுதியது போன்ற, இரு ஆவணங்களை தயாரித்து, சாட்சி கையெழுத்துடன், அந்த பத்திரத்தை மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும்.

ஒருவர், ஆரோக்கிய மனைநிலையில் இருக்கும்போது தான் இது, எழுதப்பட வேண்டும் என்ற விதியும் உள்ளது. இது சார்ந்த இறுதி முடிவு எடுக்க கீழ்க்கண்ட நிலைகள் முக்கியம்...

* நீண்டகால சிகிச்சை அல்லது 'வென்ட்டிலேட்டர்' போன்ற, உயிர் வாழும் கருவிகள் உதவியுடன் இருப்பவர்

* நோயை குணப்படுத்தவே இயலாது

* நோயாளி பிழைப்பார் என்ற நம்பிக்கையில்லை. இறுதி முடிவு எடுக்க, இரண்டு மருத்துவர்கள் தனித்தனியாக, நோயாளியை சோதித்து, முடிவு கூற வேண்டும்.

சரி, கண்ணியத்துடன் இ றக்கும் உரிமை பற்றி, மக்கள் என்ன சொல்கின்றனர் தெரியுமா?

'இந்த சட்டத்தை மதித்து ஏற்கப்பட வேண்டும்...' என்கிறார், நோயாளி ஒருவருக்காக பதிவு செய்த, 55 வயதான, டாக்டர் நிகில் தாதர்.

'எமெர்ஜென்சி வார்டு, மூக்கில் டியூப் போன்றவை இல்லாமல் கவுரவமாக இறக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்...' என்கிறார், 60 வயது, சார்ட்டட் அக்கவுன்டென்ட், பிரபுல்புரானிக்.

'பிள்ளைகளை கஷ்டப்படுத்த விரும்பவில்லை...' என்கிறார், 83 வயது, அக்கவுன்டென்ட், யஷ்வாணி கஜ்ரோல்கர்.

இவர்கள் அனைவரும் அரசின் அறிவிப்பை தொடர்ந்து, சாகும் உரிமை பத்திரத்தை எழுதி தந்துள்ளனர்.

என்ன வாசகர்களே... இதுபற்றி உங்களது கருத்தை எனக்கு எழுதுங்களேன்.



போதைப் பொருளாகிய அபினை விற்கும் செயல்பாட்டால் போர் மூண்டதென்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா! அரேபியர்களால், 9ம் நுாற்றாண்டில், சீனாவிற்குள் அபின் அறிமுகப்படுத்தப்பட்டது.

சீனாவிலும், கிழக்கிந்திய தீவுகளிலும் அபின் பழக்கம் அறிமுகமாகி, பலரும் இந்த பழக்கத்துக்கு அடிமையாகினர்.

அபினை இறக்குமதி செய்வதைவிட, செடியை உற்பத்தி செய்வது லாபம் என்று கருதி, பயிரிடத் துவங்கியது, சீனா.

இந்தியாவை, பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில், அபினை இந்தியாவில் பல இடங்களில் பயிரிட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பொருளீட்டினர், ஆங்கிலேயர்கள்.

தங்களால் அனுப்பப்படும் அபினை தான், தென் கிழக்கு ஆசிய நாடுகள் வாங்க வேண்டும் என்றும், சீனாவிலிருந்து எந்த நாடும் அபினை இறக்குமதி செய்யக்கூடாதென்று, கடந்த 1840ல், ஒரு அறிவிப்பை பல நாடுகளுக்கும் தெரிவித்தனர், ஆங்கிலேயர்கள்.

இதனால், சீனாவிற்கும், ஆங்கிலேயருக்கும் யுத்தம் துவங்கியது. இந்த யுத்தத்தில், ஹாங்காங் நகரை, ஆங்கிலேயரிடம் இழந்தது, சீனா.

இரண்டாம் உலகப் போருக்கு பின், சீனாவில், அபின் பயன்படுத்தும் பழக்கம் குறையத் துவங்கியது.

கடந்த, 1890ல், இந்தியாவில், போதைப் பொருளாக கருதப்பட்ட அபின், அரசாங்கத்தின் உரிமை பெற்ற உற்பத்தி பொருட்களில் ஒன்றாய் இருந்தது.

'மக்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஏழை மக்களின் வருவாய் சுரண்டப்படுகிறது...' என்பதை சுட்டிக்காட்டி பலர் பேசியும், எழுதியும் வந்தனர்.

எனவே, கடந்த, 1893ல், அபின் கெடுதியை பற்றி ஆராய ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. அபின் உற்பத்தியை படிப்படியாக குறைக்க வேண்டும் எனும் பரிந்துரையை வெளியிட்டது, அக்குழு. ஆனாலும், அதன் உற்பத்தி தனியாரிடம் செல்லாமல், அரசாங்கத்தின் உரிமைக்குரிய, உற்பத்தி பொருளாகவே நீடிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்றுமதி செய்யப்பட்ட அபின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

அறிவியல் ஆய்வுக்கூடங்களுக்கும், மருந்துப் பொருள் செய்வதற்கும் என, சிறிய அளவில் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்ட அபின், கடந்த 1935ல் முழுவதும் தடை செய்யப்பட்டது.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us