PUBLISHED ON : மே 10, 2026

அன்பு அம்மாவுக்கு,
நான், 32 வயது பெண். கணவர் வயது: 34. இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளேன். படிப்பை முடித்தவுடன், நல்ல சம்பந்தம், வெளிநாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளை என்று, எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர், பெற்றோர்.
திருமணத்துக்கு பின், கணவர் வெளிநாடு செல்லவில்லை. ஒன்பது ஆண்டுகள் வெளிநாட்டில் பணிபுரிந்து, சம்பாதித்ததை வங்கியில் சேமித்து வைத்துள்ளார். அந்த சேமிப்பில் இருந்து கிடைக்கும் வட்டியில் தான், இப்போது எங்கள் வாழ்க்கை சக்கரம் சுழல்கிறது.
இந்நிலையில், எங்களுக்கு இரு குழந்தைகள் பிறந்து விட்டனர். கையில் இருந்த பணத்தை வைத்து, இங்கு ஏதாவது தொழிலை தொடங்கக்கூட தகுதி இல்லாதவராக இருக்கிறார். தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கவோ, தன்னம்பிக்கையுடன் ஒரு செயலில் இறங்கவோ அவரால் முடியவில்லை. சுயதொழில் செய்ய என்னையும் அனுமதிக்கவில்லை.
என் மாமியார் - மாமனார், கடமை முடிந்தது என்று, எங்கள் திருமணத்துக்கு பின் கிராமத்துக்கு சென்று விட்டனர். அங்கு, அவர்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பை கவனித்துக் கொண்டுள்ளனர். எப்பவாவது வந்து எங்களை சந்தித்து செல்வர். வரும்போதெல்லாம், சிறிது பணமும் கொடுத்து செல்வர். மற்றபடி, என் கணவருக்கு, அறிவுரை கூறுவதோ, ஏதாவது தொழிலை ஆரம்பித்து கொடுக்கவோ முன்வருவதில்லை.
என் இரு குழந்தைகளையும் அரசு பள்ளியில் தான் சேர்த்து, படிக்க வைக்கிறேன். என் பெற்றோராலும் எனக்கு ஆதரவு தர முடியாத நிலை.
குடும்ப செலவுக்காக, கணவரது சேமிப்பு கணக்கிலிருந்து, வாரம் ஒருமுறை வங்கிக்கு சென்று பணம் எடுத்து வருவேன். அப்படி போகும்போது, அந்த வங்கியில் பணிபுரியும் திருமணமாகாத ஒரு நபர் என்னைப்பற்றி அறிந்து, எனக்கு ஆறுதல் கூற ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில், அவருடன் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு போய்விட்டது. இது சரியா, தவறா என்று ஆராயும் மனநிலை இல்லாததால், நானும் அவருடன் பழக ஆரம்பித்தேன்.
சில நாட்களுக்கு பின், பெற்றோர் நெருக்கடி கொடுக்கின்றனர் என்று கூறி, என்னிடமிருந்து விலகி, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார், அந்நபர்.
அதன்பின், நானும், அவருடனான நட்பை முற்றிலும் முறித்துக் கொண்டேன்.
ஆனால், எங்களுக்கு இடையே இருந்த நட்பை, அறிந்த அவரது நண்பர் ஒருவர், என்னை, 'பிளாக் மெயில்' செய்ய ஆரம்பித்தார். 'என் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தால், உங்கள் கதையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விடுவேன்...' என்று போனில் மிரட்டி, தினமும், 'டார்ச்சர்' கொடுத்து வருகிறார்.
யாரிடமும் பகிர முடியாமல் தவிக்கிறேன். போலீசில் புகார் கொடுக்கலாம் என்றால், 'உங்கள் இருவரது புகைப்படத்தையும், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன்...' என்று பயமுறுத்துகிறார்.
இந்த சிக்கலில் இருந்து மீள வழி சொல்லுங்கள், அம்மா.
- இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு,
உன் கணவர் அதிகம் படித்ததாக தெரியவில்லை. வெளிநாட்டில் உடலுழைப்பு தொழிலாளராக வேலை செய்திருக்கலாம். அவரது வங்கி சேமிப்புத் தொகை அதிகபட்சம், 25 லட்சம் ரூபாய் இருக்கும் என, யூகிக்கிறேன். மாதாந்திர வட்டி, 12,500 ரூபாயிலிருந்து 17,700 ரூபாய் வரை இருக்கக்கூடும். இந்த பணம், ஒரு கீழ்த்தட்டு குடும்ப செலவை மட்டுமே சரிக்கட்டும்.
'குந்தித்தின்னால் குன்றும் கரையும்' என்பர். 'உத்தியோகம் புருஷ லட்சணம்' என்பர். சம்பாதிக்க செல்லாமல், வீட்டுக்குள் புனுகுப்பூனை போல உலவி கொண்டு இருக்கும் உன் கணவரை பார்த்து, உனக்கு வயிற்றெரிச்சல். ஒரு சோம்பேறி கணவரை பழிவாங்கத்தான் திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட்டாயோ, என்னவோ! இவ்வகை பழிவாங்கல், யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமம்.
ஒரு சோம்பேறி கணவரின் மனைவியான நீ, ஒரு பலாப்பழ, சோம்பேறி. தலைவிரி கோலமாய் வெகுண்டெழுந்து கணவரை வேலைக்கு துரத்த தெரியவில்லை, உனக்கு. கணவன்-மனைவியின் சோம்பேறித்தனம் பிள்ளைகளுக்கும் பரவும் அபாயம் இருக்கிறது. நீ, ஒரு விவேகி என்றால், கணவரின் சேமிப்பை எதாவது ஒரு தொழிலில் போட்டு உழைத்து, பத்து மடங்காக்கி இருக்க வேண்டும்.
சரி விடு, உன் வீட்டுக்குள் எரியும் பிரச்னையை அணைக்கப் பார்ப்போம்.
ஒரு பெண்ணை ஆபாசப்படம் வைத்து மிரட்டுவது மிகவும் கடுமையான குற்றம். இது, இந்திய சட்டப்படி, 'பிளாக்மெயில், சைபர் கிரைம்' மற்றும் பாலியல் வன்முறையாகும். ஆபாசபடம் வெளியாவதற்கு முன், காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும்.
நீ செய்ய வேண்டியது-...
அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று எழுத்துப்பூர்வ புகார் அளிக்கலாம். காவல்துறை அந்த நபரை அழைத்து விசாரணை செய்து, ஆபாசபடங்களை நீக்க செய்யும்.
தேசிய இணையக் குற்ற புகாரளிப்பு இணையதளத்தில் புகார் செய்து, ஆபாசபடம் மீடியாவில் பகிரப்படுவதை தடுக்கலாம்.
புகார் செய்யும் போது, பிளாக் மெயிலரின் குறுஞ்செய்திகள் மிரட்டல், ஆடியோக்கள், அவனது மொபைல்போன் எண், சமூகதளங்களில் அவனது கணக்கு பற்றிய தகவல்களை சேர்க்கலாம்.
மிரட்டல் கடுமையாக இருந்தாலோ, படம் வெளியானாலோ, குற்றவாளி கைது செய்யப்படுவார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகும். முடிவில் சம்பந்தப்பட்டவருக்கு சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
பிளாக்மெயிலரை தனியே சந்திக்காதே; பணம் கொடுக்காதே. மீண்டும் ஒருமுறை திருமணபந்தம் மீறிய உறவில் ஈடுபடாது கவனமாக இரு. கணவரை, வற்புறுத்தி வேலைக்கு அனுப்பு அல்லது சுய தொழில் செய்ய வை. இது எதுவும் சரிவரவில்லை என்றால், உன் மாமனார்-மாமியார் இருக்கும் ஊருக்கு சென்று, தென்னந்தோப்பை கவனிக்க சொல்லவும். சிரத்தையாக செய்தால், விவசாயம் எப்போதும் கைவிடாது.
- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
