
ஏப்ரல் 22 உலக பூமி தினம்
ஏப்ரல் 22ம் தேதி, உலகம் முழுவதும் உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. பூமியையும் அதன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்துவதற்கும், சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்தத் தினம் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. இந்த தினத்தின் முக்கிய முழக்கம், 'நமது பூமியில் முதலீடு செய்யுங்கள்!' என்பது தான்.
கடந்த, 1960-களின் பிற்பகுதியில், தொழில்துறை வளர்ச்சியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பேரழிவுகள் அமெரிக்காவில் பெரும் கவலையை ஏற்படுத்தின. 1969-ல், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய எண்ணெய் கசிவு, கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அமெரிக்க செனட்டர், கெய்லார்ட் நெல்சன் என்பவரின் முயற்சியால், ஏப்ரல் 22, 1970ல், முதல் பூமி தினம் அனுசரிக்கப்பட்டது. லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தெருக்களில் இறங்கிப் போராடினர். இதுவே, நவீன சுற்றுச்சூழல் இயக்கத்திற்கு அடித்தளமிட்டது. இன்று, பூமி தினம் உலகின், 190க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
நாம் அனைவரும் வாழ்வதற்கு ஆதாரமான ஒரே இடம் பூமி மட்டுமே.
காலப்போக்கில், மனிதனின் பொறுப்பற்ற செயல்களால் பூமிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது...
அவை- காலநிலை மாற்றம்: புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் உண்டாகும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம், புவி வெப்பமயமாதல் மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு வழிவகுக்கிறது
பல்லுயிர் இழப்பு: காடுகள் அழிக்கப்படுவதாலும், நீர்நிலைகள் மாசடைவதாலும் தாவரங்கள், விலங்குகளின் இனங்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன
பிளாஸ்டிக் மாசுபாடு: பிளாஸ்டிக் கழிவுகள் நிலம், நீர் மற்றும் கடல் சூழலைச் சீரழித்து, மனிதர்கள், விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன.
இந்தச் சவால்களை எதிர்கொள்ள, பூமியை பாதுகாப்பது அவசரமான முதலீடாகிறது.
உலக பூமி தினம், ஒவ்வொரு தனிமனிதனும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தன் பங்கை ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.
மரம் நடுதல்: கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்ஸிஜனை வழங்கும் மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்தலாம்
பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல்: ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, துணிப்பைகள், மறுபயன்பாட்டு பாத்திரங்களை பயன்படுத்துதல்
மறுசுழற்சி: கழிவுகளை குறைத்தல், மறுபயன்பாடு செய்தல், மறுசுழற்சி செய்தல் போன்றவைகளை அன்றாட வாழ்வில் பின்பற்றுதல்
ஆற்றல் சேமிப்பு: மின்சாரத்தை வீணாக்காமல் பயன்படுத்துவது, பொதுப் போக்குவரத்து அல்லது மிதிவண்டியை பயன்படுத்துவது ஆகியவை மூலம் கார்பன் மாசை குறைக்கலாம்.
உலக பூமி தினம், பூமியின் எதிர்காலம் நம் கைகளில்தான் உள்ளது என்பதை உணர்த்துகிறது. நாமும் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, சுற்றுச்சூழலை காப்பதற்கான உறுதியேற்போம். நம் அன்னையான பூமிக்கு நாம் செய்யும் ஒவ்வொரு முதலீடும், நம் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உத்தரவாதமாகும். இயற்கையைப் போற்றி, பேணிக் காப்போம்!
பார்வதி ஓமனக்குட்டன்

