/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
செவ்வாயின் பிரமிடு வடிவ பாறை உருவானது எப்படி?
/
செவ்வாயின் பிரமிடு வடிவ பாறை உருவானது எப்படி?
PUBLISHED ON : மார் 26, 2026 07:40 AM

செவ்வாய் கிரகத்தில் தென்படும் பிரமிடு போன்ற ஒரு தோற்றம், வேற்றுலக உயிரினங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது. கடந்த 2002ல் நாசாவின் 'மார்ஸ் குளோபல் சர்வேயர்' விண்கலம் அனுப்பிய படங்களை ஆய்வுசெய்த வில்மர் ஃபாஸ்ட், இதனை சுட்டிக்காட்டினார்.
எகிப்திய பிரமிடுகளைப் போலவே செவ்வாயில் சில பாறைகள் இருந்தன. எனவே, இணையதளங்களில் வேற்றுலக நாகரிகம் குறித்த கற்பனைகளுக்கும் விவாதங்களுக்கும் அந்தப் படங்கள் இன்றும் பெரும் தீனியாக அமைந்து வருகிறது.
இந்த விநோத அமைப்பு செவ்வாயின் மாபெரும் பள்ளத்தாக்கான 'வேலிஸ் மெரினெரிஸ்' பகுதியில் உள்ள 'கேண்டர் சாஸ்மா' என்ற இடத்தில் உள்ளது. இதன் கூர்மையான விளிம்புகளும் சமச்சீர் வடிவமும், 'இதை இயற்கையால் உருவாக்கியிருக்க முடியுமா?' என்ற சந்தேகத்தை கிளப்பின. அவ்வப்போது வெளியாகும் செவ்வாய் நிலப் படங்களும் சமூக ஊடகங்களில் இத்தகைய விவாதங்களை கிளப்பியபடியே உள்ளன.
ஆனால், விஞ்ஞானிகளின் கருத்து வேறாக இருக்கிறது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் நிபுணர்கள், இது அடுக்குப்பாறைச் சிதைவினால் உருவான ஒரு மேடுதான் எனக் கூறுகின்றனர்.
பல லட்சம் ஆண்டுகளாக வீசும் செவ்வாய்க் காற்றும், முற்காலத்தில் அங்கிருந்த நீரோட்டமும் இத்தகைய நேர்த்தியான வடிவங்களை இயற்கையாகவே செதுக்க முடியும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புவியியல் ரீதியான மாற்றங்கள் தற்செயலாக இத்தகைய வடிவங்களை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.
கோள் புவியியலாளர்கள், செவ்வாய் கிரகம் முழுதும் காட்சி மாயைகள் நிறைந்துள்ளதை சுட்டிக் காட்டுகின்றனர். ஒரு பொருளின் வெளிப்புற வடிவம் மனிதக் கட்டுமானத்தை ஒத்துப்போவதால் மட்டுமே அது வேற்றுலக நாகரிகத்தின் அடையாளம் என்று கூறிவிட முடியாது.
உண்மையில், மனித மனம், புதியதைப் பார்க்கும்போது, தனக்குப் பரிச்சயமான வடிவங்களோடே ஒப்பிடுவதால்தான், இதுபோன்ற வதந்திகள் கிளம்புகின்றன என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

