PUBLISHED ON : மே 14, 2026 08:05 AM

கடந்த ஏழு ஆண்டுகளாக, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வாளர்கள், பிரிஜ், 'ஏசி', போன்றவற்றின் தொழில்நுட்பத்தை அடியோடு மாற்ற முயன்று வந்தனர். குறிப்பாக, புவி வெப்பமடைதலைத் துாண்டும் பசுமைக் குடில் வாயுக்கள் இன்றி இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகளை உருவாக்குவதுதான் அவர்களது நோக்கம். அண்மையில் அதில் வெற்றியடைந்து, அதை வர்த்தக ரீதியில் தயாரிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
வழக்கமான குளிர்சாதனப் பெட்டிகளில் வாயுக்கள் சுருக்கப்படுவதன் வாயிலாக குளிர்ச்சி உருவாக்கப்படுகிறது. ஆனால், கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள், திடப்பொருள்களைப் பயன்படுத்தி குளிர்ச்சியை உருவாக்கியுள்ளனர். 'பாரோகலோரிக்' என்ற தன்மை கொண்ட திடப் படிகங்களை அழுத்துவது, பின் விடுவிப்பது ஆகிய இரு செயல்களின் வாயிலாக வெப்பமாற்றம் நிகழ்கிறது.
அதாவது, அழுத்தம் அதிகரிக்கும்போது வெப்பமடையும் இப்பொருள்கள், அழுத்தம் குறையும்போது குளிர்ச்சியைத் தருகின்றன. இதில் வாயுக்கள் பயன்படுத்தப்படாததால், கசிவு ஏற்படும் அபாயமோ அல்லது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்போ இல்லை.
மின்சாரமும் இதற்கு அதிகம் தேவையில்லை. தவிர, பிரிஜ், 'ஏசி', போன்றவற்றின் மோட்டார் ஏற்படுத்தும் சப்தம் இதில் இருக்காது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தும் குளிர்பதனக் கருவிகள் வீடுகளுக்கு வந்துவிடும்.
