எல்லா பக்கமும் 'துண்டு' போடும் தி.மு.க., 'மாஜி' நிர்வாகி!
எல்லா பக்கமும் 'துண்டு' போடும் தி.மு.க., 'மாஜி' நிர்வாகி!
PUBLISHED ON : மே 11, 2026 01:20 AM

ஏலக்காய் டீயை பருகியபடியே, “அமைச்சராகி சாதிச்சுட்டாங்க பா...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.
“விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதி, த.வெ.க., - எம்.எல்.ஏ.,வா கீர்த்தனா என்ற இளம்பெண் ஜெயிச்சிருக்காங்க... பிரசாரம் செய்தப்பவே, தேசிய ஊடகங்கள்ல ஹிந்தியில் பேசி, பலரது கவனத்தை ஈர்த்தாங்க பா...
“இவங்க, தேர்தல் வியூக நிறுவனமான, 'ஐபேக்'ல முன்னாடி வேலை பார்த்திருக்காங்க... த.வெ.க., தேர்தல் பிரிவு செயலர் ஆதவ் அர்ஜுனா மூலம், 'சீட்' வாங்கி ஜெயிச்சாங்க பா...
“பலம் வாய்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து ஜெயிச்சிருக்கிறதால, விஜய் அமைச்சரவையில் இடம் பிடிக்க முயற்சி செஞ்சாங்க... 'சிவகாசியின் முதல் பெண் எம்.எல்.ஏ., நான் தான்'னு சமூக வலைதளங்கள்ல பதிவுகளை போட்டுட்டு இருந்தாங்க... எதிர்பார்த்த மாதிரியே, இப்ப அமைச்சராகிட்டாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“நிறுத்தப்பட்ட வசூல் தொடராம இருக்கணும்னு வேண்டிக்கறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகள்ல இருக்கற கல் குவாரிகள்ல இருந்து, கேரளாவுக்கு கனிம வளங்களை எடுத்துண்டு போறா... முறைப்படி அனுமதி வாங்கி எடுத்துண்டு போனாலும், ஆளுங்கட்சியா இருந்த தி.மு.க., ஆதரவுடன், சில தனி நபர்கள், லாரிகளை மடக்கி வசூல்ல ஈடுபட்டிருந்தா ஓய்...
“சோதனைச்சாவடிகள் பக்கத்துலயே ரோட்டோரமா நின்னு, பட்டவர்த்தனமாவே இந்த வசூல் வேட்டை நடந்துது... ஒரு யூனிட் மண் மற்றும் கற்களுக்கு தலா, 400 ரூபாய் வீதம் வசூல் பண்ணினா ஓய்...
“ஓட்டு எண்ணிக்கை அன்னைக்கு கூட வசூல் நடந்துது... மதியத்துக்கு மேல, தி.மு.க., தோல்வின்னு தெரிய வரவும், வசூல் நபர்கள் சத்தமில்லாம நடையை கட்டிட்டா ஓய்...
“இப்ப, எந்த வசூலும் இல்லாம லாரிகள் கேரளாவுக்கு போறது... 'இந்த நிலை புதிய ஆட்சியிலும் தொடரணும்'னு, கல் குவாரி தொழில்ல ஈடுபட்டிருக்கறவா எல்லாம் ஆண்டவனை வேண்டிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
“எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவா செயல்பட்டிருக்காரு வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த கட்சி விவகாரமுங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“பெரம்பலுார் மாவட்டம் குன்னம் தொகுதியில, தி.மு.க., சார்பில் அமைச்சரா இருந்த சிவசங்கர் போட்டியிட்டு ஜெயிச்சிருக்காரு... இவரை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரண்யா போட்டியிட்டாங்க வே...
“பிரசார நேரத்துல, தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர் ஒருத்தர், கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருக்கிற தன் மருமகனுடன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தரை பார்த்திருக்கார்... 'சிவசங்கருக்கு எதிரா வேலை பார்த்து, சரண்யாவை ஜெயிக்க வைக்கிறேன்'னு சபதம் போட்டு, பல லட்சங்களை வாங்கியிருக்காரு வே...
“அதையும் மீறி சிவசங்கர் ஜெயிச்சிட்டாலும், 'மாஜி' நிர்வாகி அசரல... இப்ப, விஜய் கட்சி வெற்றிக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டவர், தன் மருமகனை விட்டு பட்டாசு வெடிக்க வச்சு, அந்த பக்கமும், 'துண்டு' போட்டுட்டு இருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
“ஞானமூர்த்தியும், ராமச்சந்திரனும் வரா... சுக்கு காபி குடும் நாயரே...” என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
