சமூக பொறுப்புடன் செய்தியளிக்கும் மரபை உருவாக்கியது 'தினமலர்'
சமூக பொறுப்புடன் செய்தியளிக்கும் மரபை உருவாக்கியது 'தினமலர்'
PUBLISHED ON : ஏப் 08, 2026 12:00 AM

தினமலரின் 75 ஆண்டு கால பயணம் என்பது அசாதாரணமானது. தனிப்பட்ட ஒவ்வொருவரின் நலனையும் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தை இணைத்து அனைவருக்கும் நல்வாழ்வு என்ற தாரக மந்திரத்தோடு 'தினமலர்' பயணிக்கிறது.
நம்மை சுற்றியுள்ளவர்களின் நலனை, அவர்களுடைய பார்வையிலேயே பார்த்து வெளிப்படுத்தும் தன்மை தான் சமூக விழிப்புணர்வு. இந்த சமூக விழிப்புணர்வுக்காக தொடங்கப்பட்ட இதழ்தான் தினமலர். பெரியவர் டி.வி.ஆரால் தினமலர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தேச நலன், சாதி மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் மக்களின் தேவைகளை மையப்படுத்தி செயலாற்றி வருகிறது.
சமூக மாற்றம் என்பது தானாக நிகழ்வது அல்ல. அது சிந்தனைகளின் மோதலிலும், உண்மைகளின் வெளிப்பாட்டிலும், பொதுக்கருத்தின் அழுத்தத்திலும் உருவாகிறது. செய்திகளோடு மாற்றத்திற்கான மனநிலையையும் உருவாக்கும் ஆற்றலை தினமலர் கொண்டுள்ளது. சாதிய ஒடுக்குமுறை, பெண்களின் உரிமை, தொழிலாளர் பிரச்னைகள், அரசியல் ஊழல் போன்றவை தினமலரால் பதிவு செய்யப்பட்ட போது, அவை மக்களிடையே சிந்தனையை துாண்டின. உண்மை தகவல்களுடன் பொறுப்புணர்வையும் இணைத்த தினமலரின் செய்தியளிப்பு, சமூகத்தின் மனநிலையை மாற்றும் வலுவான ஆயுதமாகும். சமூக பொறுப்புடன் செய்தியளிக்கும் மரபை உருவாக்கியது தினமலர் என்றால் மிகையல்ல.
உண்மை, நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இதழால் மட்டுமே ஒரு விழிப்புணர்வான, ஜனநாயகமான சமூகத்தை உருவாக்க முடியும். தினமலரின், எப்பக்கமும் சார்பற்ற, மக்களுக்கான செய்திகளும் கட்டுரைகளும் மிகப்பெரிய சமூக மாற்றங்களைத் ஏற்படுத்தி இருக்கின்றன. இன்றைக்கு பேசப்படுகின்ற வாழ்வுரிமை, சமத்துவம், சுதந்திரம், மனித மாண்பு ஆகியவற்றை உள்ளடக்கிய, மனித உரிமைகளை பேசியதில் தமிழ் இதழியலில் தினமலர் முன்னோடி என்பதனை மறுக்க முடியாது. அரசியல், அரசியல்வாதிகள், சமூகவிரோதிகள் தொடர்பாக எவரும் தொடத்துணியாத விஷயங்களை பேசும் துணிச்சல் தினமலருக்கு, தொடகத்திலேயே இருந்தது. இன்றும் தொடர்கிறது. இந்த பயணத்தில் நானும் சில ஆண்டுகள் பயணித்தேன் என்பது எனக்குப் பெருமை.
தினமலர், ஒரு சமூக கண்காணிப்பகமாக, சமூக காவலனாக இருந்து, பொதுமக்களின் உரிமைகளுக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதன் பயணம் இதே உத்வேகத்தோடு தொடர்ந்து, தேசத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களை தொடர்ந்து உருவாக்கட்டும்.
வாழ்த்துகளுடன்,
ப. திருமலை
எழுத்தாளர்
