/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நமக்கான வாழ்க்கையை நாம்தான் உருவாக்க வேண்டும்!
/
நமக்கான வாழ்க்கையை நாம்தான் உருவாக்க வேண்டும்!
PUBLISHED ON : ஏப் 17, 2026 12:00 AM

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், கண்டக்டராக பணியாற்றி வரும், புதுக்கோட்டை மாவட்டம், வந்தனக்கோட்டையை சேர்ந்த, திருநங்கை கலைதேவி:
என் சொந்த ஊர், வந்தனக்கோட்டை தான். 13 வயதில் என் அடையாளத்தை முழுதாக புரிந்து கொண்டேன். திருக்கோகர்ணத்தில் உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்தேன்.
அப்போது தான் எனக்குள் மாற்றங்கள் ஏற்பட்டன. அதை, என் அம்மாவுக்கு தெரியப்படுத்தினேன்; அவர் ஏற்றுக்கொள்ளவில்லை; 'எங்கேயாவது தொலைந்து போ' என்று கூறினார்.
அந்த வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்தினாலும், என் வாழ்க்கையை நானே அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்தை அதிகப்படுத்தியது. இப்போது வரை, தனியே தான் வாழ்ந்து வருகிறேன்.
வேலை தேடி, பெங்களூருக்கு அரசு பேருந்தில் பயணித்தபோது, அந்த கண்டக்டர் என்னிடம் அன்பாக நடந்து கொண்டார். எனக்கு உணவு வாங்கி கொடுத்தார். அதற்கான பணத்தை நான் கொடுத்தபோது, 'நீ என் பொண்ணு மாதிரி இருக்கிறாய்...' என்று சொல்லி, வாங்க மறுத்து விட்டார்.
கண்டக்டர் மீதும், அந்த வேலை மீதும் எனக்கு மரியாதை உருவான தருணம் அதுதான். பெங்களூரு சென்றதும் வேலை தேடி அலைந்தேன். வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை; அங்குள்ள பஸ் ஸ்டாண்டில், பணம் வசூல் செய்ய ஆரம்பித்தேன்.
அந்த பஸ் ஸ்டாண்டில் உள்ள டிரைவர்களும், கண்டக்டர்களும் என்னிடம் நன்றாக பழகினர். 'பிளஸ் 2 வரை படிச்சிருக்க... இப்படி பணம் வாங்கும் தொழில் வேண்டாம். நீ கண்டக்டர் வேலைக்கு உரிமம் பெற விண்ணப்பி...' என்று ஒரு கண்டக்டர் கூறினார்.
அவருடைய வார்த்தை தான், இன்றைக்கு நான் கவுரவமாக பார்க்கும் இந்த வேலைக்கு என்னை தயார்படுத்தியது. கண்டக்டர் உரிமம் எடுத்தபின், புதுக்கோட்டையில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், தற்காலிக பணிக்கு விண்ணப்பித்ததில், இந்த வேலை கிடைத்தது.
இப்போது, புதுக்கோட்டை - திருச்சி வழித்தடத்தில், அரசு பேருந்தின் கண்டக்டராக, தற்காலிக பணியில் இருக்கிறேன். முதன் முதலாக வேலைக்கு சென்றபோது, மிகவும் பயமாகவும், கூச்சமாகவும் இருந்தது. இப்போது எந்த பயமும் இல்லாமல், தன்னம்பிக்கையோடு வேலை பார்க்கிறேன்.
ஆரம்பத்தில் பஸ்சில் வரும் சிலர் கேலி, கிண்டல் செய்தனர். அந்த மாதிரி நேரங்களில், மற்ற பயணியர் எனக்கு ஆதரவாக பேசினர். இந்த வேலையை மிகவும் விருப்பத்துடன் செய்கிறேன்.
எல்லாரையும் போல, திருநங்கையருக்கும் படிப்பு மிகவும் அவசியம். படிப்பு மட்டுமே இந்த சமுதாயத்தில் கவுரவமாக வாழ வைக்கும். இந்த சமூகத்தில், நமக்கான இடத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்.

