PUBLISHED ON : மே 08, 2026 12:34 AM

நடிகரும், தொழிலதிபருமான, 'லெஜெண்ட்' சரவணன் பேட்டி: தமிழக அரசியலில்,
தற்போது இளைஞர்களின் எழுச்சியை பார்க்கிறோம். ஜல்லிக்கட்டில் தொடங்கிய அந்த
எழுச்சி, இன்றைக்கு ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. புதிய
வாக்காளர்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கி யிருக்கின்றனர். நான் நடித்த
இரண்டு திரைப்படங்களால் திரைத்துறையிலும், மக்கள் மத்தியிலும் வரவேற்பு
அதிகரித்துள்ளது. மூன்றாவது திரைப்பட பணிகள் நடந்து வருகின்றன. நடிகர்
விஜய், நாடாள போயிட்டதால, அவரது இடத்தை பிடிச்சிடலாம்கிற முடிவுக்கு
வந்துட்டாரோ?
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பரந்தாமன் பேட்டி: தமிழகம் முழுதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின் தொகுதியை கவனிக்கத் தவறியவர் மீது தயவு தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை எடுத்தால் தான், உண்மையான தி.மு.க., தொண்டன் நிம்மதியாய் இருப்பான். தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல், ஸ்டாலின் முன்பு வந்து முகத்தை காட்டி நிற்கிறார். 'நான் பார்த்துக்கொள்கிறேன்' என சொன்னது, இதைத்தானா சேகர்பாபு அவர்களே?
சென்னை எழும்பூரில் தனக்கு மறுபடியும் சீட் கிடைக்காமல் தடுத்த சேகர்பாபு மீதான கடுப்பை இப்படி காட்டுறாரோ?
இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் அறிக்கை: மேற்கு வங்கத்தில், பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து, அங்கு அக்கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் எதிர்க்கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. அதேபோல, திரிபுராவிலும் இடதுசாரிகளின் கட்சி அலுவலகங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்ளன. பா.ஜ.,வின் இத்தகைய அராஜகப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது.
அவற்றை எல்லாம், அந்த மாநில எதிர்க்கட்சிகள் பார்த்துக்குவாங்க... தமிழகத்தில் உங்க ஆதரவு எந்த கட்சிக்கு என்ற முடிவை முதல்ல எடுங்க!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: சென்னை கொளத்துாருக்கும், எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளை கடந்த உறவு. கடந்த 15 ஆண்டு காலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள், கொளத்துார் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், ஐந்து ஆண்டுகள் ஆளும் கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினேன். கொளத்துார் மக்களுக்காக என்றும், நான் உண்மையாக உழைப்பேன்; அந்த மக்களோடுதான் என்றும் இருப்பேன்.
கொளத்துாரில், இவரது தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போறாரு?

