PUBLISHED ON : ஏப் 06, 2026 03:01 AM

நீலகிரி தொகுதி, தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா பேச்சு:
பெரம்பலுார் சட்டசபை தொகுதி என் பகுதி என்பதால், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதை நோட்டமிடுவர். மோடியை முதுகெலும்பு இல்லாதவர் என்றெல்லாம் லோக்சபாவில் நான் பேசியிருக்கிறேன். எனவே, இந்த தொகுதியில், ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், நம் கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் தான், மோடியும், அமித் ஷாவும் அஞ்சுவர்.
தேர்தல் பிரச்சாரம் செய்ற சாக்குல, மோடி, அமித் ஷாவுக்கு நிகரா தன் தகுதியை உயர்த்திக்க பார்க்கிறாரே!
தர்மபுரி தொகுதி, தி.மு.க., - எம்.பி., மணி பேச்சு:
தர்மபுரி சட்டசபை தொகுதியில், வன்னியர் சமூகத்தினர் ஓட்டுகள், 90,000 தான் உள்ளன. அதே சமயம், இதர சமூகத்தினருக்கு, 1.40 லட்சம் ஓட்டுகள் உள்ளன. தி.மு.க., மற்றும், தே.மு.தி.க.,வில் உள்ள, 30,000 வன்னியர்களின் ஓட்டுகள் நமக்கு வந்து விடும்... எனவே, வன்னியர்கள் ஓட்டுகள் மீது கவனம் செலுத்த தேவையில்லை. மாற்று சமூக மக்களின் ஓட்டுகள் மீது கவனம் செலுத்தி, அவற்றை முழுமையாக சேகரிக்க வேண்டும். அந்த ஓட்டுகள் தான், தேர்தலில் நமக்கு வெற்றியை தேடி தரும்.
தர்மபுரியில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சார்பில் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுறாங்க... அவங்க ஜெயிச்சிட்டு போகட்டும்னு நினைக்கிறாரோ?
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேச்சு:
போர் வந்த பிறகும், நிறைய நாடுகளில் காஸ் சிலிண்டர்கள் பற்றாக்குறை இல்லை. இந்த பிரச்னையை சிறப்பாக அந்த நாடுகளில் கையாளுகின்றனர். ஆனால், இந்தியாவில் காஸ் சிலிண்டர்கள் வினியோகத்தில் எந்த முன்னேற்பாடுகளையும், பிரதமர் மோடி செய்யவில்லை. காஸ் சிலிண்டர்கள் கூட, 'மேக் இன் இந்தியா' இல்லை; வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி ஆகின்றன.
மோடி மீது குறை சொல்றாங்களே... தமிழகத்தில், காஸ் சிலிண்டர்களை பதுக்கி, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கிறவங்க மீது, தி.மு.க., அரசு ஏன் நடவடிக்கை எடுக்கலை?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு:
மக்களே, உங்கள் மகளுக்கும், மகனுக்கும் திருமணம் செய்யும் போது நல்ல பெண்ணையும், மாப்பிள்ளையையும் தேர்ந்தெடுக்கும் நீங்கள், நாட்டை ஆள்வதற்கு மட்டும் ஏன் தறுதலைகளை தேர்ந்தெடுக்கிறீர்கள்... மற்ற கட்சிகள் கொடுப்பதாக சொல்வது போல, நான் இலவசமாக எதையும் கொடுக்க மாட்டேன். சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், குடிக்க சுத்தமான நீர் தருவேன்; வேறு எதையும் தர மாட்டேன். எனக்கு ஓட்டு போட்டால் போடு; இல்லை என்றால், வேண்டாம்.
இவர் ஆட்சிக்கு வந்தால் தானே இதை எல்லாம் தருவார்... இவருக்கு அந்த கஷ்டத்தை மக்கள் தரவே மாட்டாங்க!

