PUBLISHED ON : ஏப் 02, 2026 03:46 AM

தி.மு.க., செய்தி தொடர்புக் குழு துணை தலைவர் மருது அழகுராஜ்
அறிக்கை: கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., பொதுச்செயலர்
பழனிசாமிக்கு ஆதரவளித்தது, எஸ்.டி.பி.ஐ., - தே.மு.தி.க., - புதிய தமிழகம்
ஆகிய மூன்று கட்சிகள்தான். ஆனால், இன்று அந்த மூன்று கட்சிகளுமே, அவரை
விட்டு வெளியேறி இருக்கின்றன. இது, எப்பவுமே காலத்தால் உதவியவர்களை
கழுத்தறுப்பு செய்யும் பழனிசாமியின் வஞ்சக குணத்திற்கு கூடுதல் சாட்சி.
இந்த மூன்று கட்சிகள் கூட்டணியில் இருந்தும், கடந்த லோக்சபா தேர்தலில்
அ.தி.மு.க., ஓரிடத்தில் கூட ஜெயிக்கலையே... இதுல, புதிய தமிழகம் தவிர்த்து,
மற்ற ரெண்டு கட்சிகளும் இப்ப உங்க கூட்டணிக்கு வந்துட்டாங்க... என்ன நடக்க
போகுதோ...!
தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் பேச்சு: உலகிலேயே வீட்டு உபயோக பொருட்கள் கூப்பன் வழங்கும் திட்டம், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தான் இடம் பெற்றுள்ளது. இதனால், தி.மு.க., கூட்டணி, 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
தப்பித் தவறி தேர்தலில் ஜெயிக்காம போயிட்டா, உங்க கட்சி தலைமை அலுவலகமான, அறிவாலயத்தில், வீட்டு உபயோக பொருட்கள் கடை ஒன்றை திறந்துடலாம் போலிருக்கே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு:
கடந்த ஐந்தாண்டுகளில், தி.மு.க., ஆட்சியில் இருந்தது. அப்போது எல்லாம் மக்களுக்கு, 8,000 ரூபாய் கூப்பன் வழங்கி இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'ஆட்சிக்கு வந்தால், குடும்பத்துக்கு, 10,000 ரூபாய் தருவோம்' என அறிவித்த உடன், பரிசு கூப்பன் என, ஸ்டாலின் அறிவிக்கிறார். எத்தனை கூப்பன்களை அறிவித்தாலும், தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.
'அவங்களை விட, நாங்க கூடுதலா, 2,000 ரூபாய் தர்றதால, மக்கள் ஆதரவு எங்களுக்கு தான்'னு சொல்றாரோ?
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா பேச்சு: தற்போது, 8,000 ரூபாய் பரிசு கூப்பன் தருகிறோம் என்று தேர்தல் அறிக்கையில், தி.மு.க., அறிவித்துள்ளது. ஆனால், இந்த கூப்பன், வருமான வரி கட்டாத குடும்பத்திற்கு தான் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். குறிப்பாக, இன்றைக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கட்டுகின்றனர்.ஆகவே, தி.மு.க., தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது. ஆனால், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, 'அனைத்து குடும்பங்களுக்கும், 'பிரிஜ்' வழங்கப்படும்' என அறிவித்துள்ளார்.
இன்று, தமிழகத்தில் பிரிஜ் இல்லாத குடும்பங்களை விரல் விட்டு எண்ணிடலாம்... அதனால, பிரிஜ்ஜை விட, ரொக்கத்துக்கு தான் மவுசு அதிகம்!

