PUBLISHED ON : மார் 28, 2026 03:21 AM

தி.மு.க., ஆதரவாளரான நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி: சினிமா
நடிகர்களை புத்திசாலிகளாக நினைக்க வேண்டாம். நடிகர் விஜய் வாய்க்கு வந்ததை
தேர்தல் அறிவிப்புகளாக உளறுகிறார். சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை
புரிந்து கொள்ளாமல் பேசுகிறார். உளறலின் உச்சக்கட்டமாக, சினிமாவில் எழுதி
கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால் அவர் கைதட்டல் வாங்கலாம்;
ஓட்டுகள் விழாது. பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவோரே, த.வெ.க.,வில்
உறுப்பினர்களாக உள்ளனர். இவரும் சினிமா நடிகர் தானே...
இவரும் புத்திசாலி
இல்லைன்னு மக்கள் நினைச்சுடக் கூடாதே!
அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக முதல்வராக இருந்தவரும், தற்போது தி.மு.க., உறுப்பினருமாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் பேட்டி: அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளான இலவச குளிர்பதன பெட்டி, மகளிருக்கு மாதம், 2,000 ரூபாய், ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்டவை பொய்யான வாக்குறுதிகள். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை என்பதை, மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை.
அது சரி... '2021ல் தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டனரா' என, மக்கள் திருப்பி கேட்டால் இவர் என்ன பதில் சொல்வார்?
ஹிந்து முன்னணி பொதுச்செயலர் கிஷோர் குமார் பேட்டி: தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளாக ஹிந்து விரோத தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் ஹிந்துக்களுக்கு எதிராக தி.மு.க., செயல்பட்டது. எனவே, முருக பக்தர்கள், தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும்.
தேர்தல் அறிக்கையில், 'ஹிந்துக்களுக்கு ஆதரவு' என்று அறிவிக்கும் கட்சிக்கு மட்டுமே, சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிப்போம்.
ஆனா, பா.ஜ., கட்சியே கூட அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுமா என்பது சந்தேகம் தான்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் பேச்சு: தமிழகத்தில் கடந்த காலங்களில் மக்களுக்கு, 'டிவி, மிக்சி, கிரைண்டர், சைக்கிள், லேப்டாப்' என, அனைத்தும் இலவசமாக கொடுத்தனர். ஆனால், தண்ணீரை இலவசமாக கொடுக்க யாரும் முன்வரவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட, தண்ணீரை இலவசமாக கொடுக்காமல், ஒரு லிட்டர், 10 ரூபாய் என்ற விலையில் தான் கொடுத்தார்.
இப்ப, தண்ணீர் வியாபாரம் தான் லாபம் கொழிக்கும் தொழில்... ஆளுங்கட்சியின் பல முக்கிய பிரமுகர்களே பெரிய அளவில் இந்த தொழிலை செய்றப்ப, தண்ணீரை எப்படி இலவசமா தருவாங்க?

