PUBLISHED ON : ஜூன் 03, 2026 12:08 AM

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜெயித்த டாக்டர் ராஜிவ், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ளார்.
சமீபத்தில் ராமநாதபுரம் வந்தவர், கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து, செய்தியாளர்களை சந்தித்தவர், சுற்றுச்சூழல் என்பதற்கு பதிலாக, சுற்றுலா துறை என தொடர்ந்து இரு முறை கூறினார். உடனிருந்தவர்கள், 'சுற்றுச்சூழல்' என எடுத்துக் கூறியதும், மீண்டும் முதலில் இருந்து பேசினார்.
அப்போதும் இடையில் சுற்றுலா துறை என அவர் கூற, அருகில் இருந்தவர்கள் சுற்றுச்சூழல் என எடுத்துக் கூறினர். உடனே சுதாரித்த அமைச்சர், 'சுற்றுலா தலங்களில் உள்ள சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை' என கூறி தப்பித்து கொண்டார்.
அங்கிருந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், 'புதுசா பொறுப்பேற்றதால வழி தெரியாம சுற்றி சுற்றி வர்றார் போலும்' என கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.
