PUBLISHED ON : மே 21, 2026 12:00 AM

திருப்பூர் தெற்கு தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., பாலமுருகன், தன் முதல் பணியாக, ஈஸ்வரன் கோவில் பாலம் கட்டுமான பணியை ஆய்வு செய்ய வந்தார். அவரது கட்சியினர் பலர், கார்கள் மற்றும் ஆட்டோக்களில் உடன் வந்தனர்.
ஏறத்தாழ, 80 சதவீதம் பணி முடிந்த பாலத்தில், த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் வந்த கார்கள், ஆட்டோ, டூ - வீலர்கள் நிறுத்தப்பட்டன. கூட்டம் கூடியதை பார்த்து அவ்வழியே சென்ற மக்கள், 'என்னங்க... என்னாச்சுங்க?' என விசாரித்தனர்.
பாலம் கட்டுமான பணி பற்றி விளக்க வந்த அதிகாரிகள் ஓரமாக நிற்க, எம்.எல்.ஏ., பாலமுருகனோ, பிரசாரத்துக்கு வந்தது போல், கட்சி நிர்வாகிகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த ஒருவர், 'அதிகாரிகள் அவங்க வேலையை பார்த்துட்டு இருந்திருப்பாங்க... அவங்களை அழைச்சிட்டு வந்து, வெட்டியா நிக்க வச்சிருக்காரே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
