PUBLISHED ON : ஏப் 15, 2026 01:44 AM

வேலுார், மண்டி தெருவில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக, துணை முதல்வர் உதயநிதி சமீபத்தில் பிரசாரம் செய்தார்.
திறந்த வேனில் நின்றபடி மைக்கில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பெண்கள் சிலர், அவர் பேசுவது கேட்கவில்லை என கூறினர். பின், மற்றொரு மைக்கை வாங்கி, உதயநிதி தொடர்ந்து பேசினார்.
அப்போது, 'நான் பேசியது கேட்டதா? என்னது எதுவுமே கேட்கலையா... என்னம்மா இப்படி குண்டை துாக்கி போடுறீங்க. இப்போது கேட்கிறதா... மறுபடியும் முதல்ல இருந்து பேசணுமா அல்லது 'ராகிங்' பண்றீங்களா' என நகைச்சுவையாக கேட்டபடி, தன் பிரசாரத்தை தொடர்ந்தார்.
இதை கேட்ட பெண் ஒருவர், 'நம்ம துணை முதல்வர் இன்னும் சினிமாவுல பண்ணிய காமெடி சீன்களை மறக்கலை போலும்...' என கூற, அருகில் இருந்த பெண், 'மறுபடியும் சினிமாவுல நடிக்க ஆசைப்படுறாரோ என்னவோ...' என்றபடியே, அங்கிருந்து கிளம்பினார்.
