PUBLISHED ON : மே 22, 2026 12:13 AM

ஜெ.கோபாலசுவாமி,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசிய முற்போக்கு
திராவிட கழக கட்சி பொதுச்செயலர் பிரேமலதா, சமீபத்தில் சட்டசபையில் ஓர்
அறிக்கை வெளியிட்டார்.
அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்
விஜய், குதிரை பேரம் வாயிலாக எம்.எல்.ஏ.,-க்களின் ஆதரவைப் பெற்றிருப்பதாக
சந்தேகப்படுவதாகவும், அது குறித்து விஜய் விளக்கமளிக்க வேண்டும் என்றும்
கோரியிருந்தார்.
கண்ணாடி வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு, பிறர் மீது கல்லெறிவது போன்றது தான், அரசியல்வாதிகளின் இத்தகைய பேச்சுகள்.
முதல்வர் விஜயை நோக்கி விரல் நீட்டும் முன், மக்கள் பிரதிநிதியான பிரேமலதா
தமிழக வாக்காளர்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.
இத்தனை காலம் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ஒட்டி
உறவாடிய தே.மு.தி.க., திடீரென, தி.மு.க., பக்கம் சாய்ந்தது எதனால்?
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் அரசியல் காலம் முழுதும்,
தி.மு.க.,வை கடுமையாக எதிர்த்தார்; ஊழலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் எதிராக
குரல் கொடுத்தார்.
ஆனால், இன்று அதே கட்சியுடன் கூட்டணி அமைப்பது எவ்வகையான சித்தாந்தம்?
தமிழக மக்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதுவும் செய்யாத, பொருளாதார
மேதையாகவும் அறியப்படாத பிரேம லதாவின் சகோதரர் சுதீஷுக்கு ராஜ்யசபா இடம்
ஒதுக்கப்பட்டது எந்த அடிப்படையில்?
இது, தொண்டர்களின் உழைப்பிற்கு
கிடைத்த அங்கீகாரமா அல்லது கூட்டணி உறுதி செய்யப்படுவதற்கு முன்,
திரைமறைவில் நடந்த 'உயர்மட்டபேச்சு'களின் கைமாறா?
த.வெ.க., 'குதிரை பேரம்' செய்வதாக சாடும் பிரேமலதா, தி.மு.க., கூட்டணியில் தமக்கு என்ன கிடைத்தது என்பதை வெளிப்படையாக சொல்வாரா?
நம்பகத்தன்மை என்பது செயல்பாட்டில்தான் இருக்கிறது. த.வெ.க., தலைவரிடம்
தெளிவு கோரும் பிரேமலதா, கூட்டணி மாற்றத்தில் இடைத்தரகர்கள் வாயிலாக
எந்தவிதமான பரிமாற்றமும் நடக்கவில்லை என்பதை, மக்களுக்கு வெளிப்படையாக
அறிவிப்பாரா?
விஜயின் அரசியல் வாழ்வுக்கு நல்லதல்ல!
ஏ.வி.ராமநாதன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்கள் அனைவரும் பிறப்பால் சமம்; அவர்களது தொழிலால் வரும் தகுதிகளால் மட்டுமே அவர்கள் வேறுபடுகின்றனர்' என்று, பகவத் கீதையில் கிருஷ்ணர் உரைத்ததை தான், திருக்குறள், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான்' என்கிறது.
உலக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்விற்கான உயர்நெறி முறைகளை கொண்டதுதான் ஹிந்துக் களின் சனாதனம்!
பிறப்பால் மனிதர்களை பிரிப்பது சனாதன தர்மம் அல்ல; ஜனநாயகம் என்ற பெயரில் அதிகாரமும், பதவியும் தங்கள் குடும்பத்திடமே இருக்க வேண்டும் என்று கருணாநிதி குடும்பத்தினர் நினைப்பது போல், ஆணவம் கொண்டவர்களால் சிறுக சிறுக உருவானது தான் ஜாதியே தவிர, அது சனாதனம் உருவாக்கியது அல்ல!
இந்த உண்மைகளை எல்லாம் பகுத்தறியும் திறன் அற்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி, மூன்று ஆண்டுகளுக்கு முன், 'டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போல, சனாதனத்தை ஒழிக்க வேண்டும்' என்று பேசி, நீதிமன்றத்தால் குட்டுப்பட்டார். ஆனாலும் திருந்தாமல், இப்போது, சட்டசபையில், 'சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்' என்று பேசியுள்ளார்.
இதிலிருந்து, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மட்டுமல்ல; நீதிமன்றத்தையும் அவர் மதிக்கவில்லை என்பது புரிகிறது.
இதில், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ., முஸ்தபாவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் மவுலானாவும், உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சை, தான்தோன்றித்தனமாக ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதை, கோடிக்கணக்கான ஹிந்துக்களின் ஓட்டு களை பெற்று, முதல்வர் அரியணையில் அமர்ந்திருக்கும் விஜய் வேடிக்கை பார்ப்பது சரியா?
இப்படிப்பட்டவர்களை ஆரம்பித்திலேயே விஜய் அடக்கிவைக்க வேண்டும். இல்லையென்றால், விஜய் ஹிந்துக்களின் நம்பிக்கையை இழந்து விடுவார். அது அவரது அரசியல் வாழ்வுக்கு நல்லது அல்ல!
மனிதம் வளர்க்கும் கல்வியே தேவை!
எஸ்.உதயம் ராம், பெரம்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஆட்சிகளைப் போல் அல்லாமல், புதிய அரசு, கல்வித் துறையில் எந்த சமரசமும் இல்லாமல், கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்; அப்போதுதான் நாட்டுப்பற்றுடன் கூடிய, ஒழுக்கம் நிறைந்த சமூகம் உருவாகும்!
அதற்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நீதிபோதனை, விளையாட்டு வகுப்புகள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்; இவற்றை பாடத்திட்டத்தில் ஒரு பிரிவாக சேர்த்து, மதிப்பெண் வழங்க வேண்டும்.
l குடும்ப உறவுகளின் மேன்மை, நாட்டுப்பற்று, கலாசாரம், பண்பாடுகள் குறித்த நிகழ்வுகள் மட்டுமே பள்ளி - கல்லுாரிகளில் நடைபெற அனுமதிக்க வேண்டும்; பரிசுப் பொருட்கள் வழங்கும் போது, கோப்பைகளுக்குப் பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு, அறநெறி சார்ந்த நுால்களைப் பரிசாக வழங்கி, வாசிப்புத்தன்மையை வளர்க்க வேண்டும்
l 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
l பள்ளி - கல்லுாரி வளாகங்களுக்கு அருகில், மது மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கண்காணிப்பதுடன், அதை விற்பனை செய்வோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
l ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் கூட்டம், அனைத்து பள்ளிகளிலும் மாதம் ஒரு முறை கட்டாயம் நடத்தப்பட்டு, மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கம் கண்காணிக்கப்பட வேண்டும்
l கல்லுாரிகளில் மாணவர் சங்கங்கள், தேர்தல்கள், 'பஸ் டே' கொண்டாட்டம் போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும்
l ஜாதி, மதம், அரசியல் சார்புடைய பேரணிகள், கொண்டாட்டங்கள், போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்; மீறும் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் தண்டனை வழங்க வேண்டும்.
'மனிதம் உருவாக்கும் கல்வியே தேசத்தை மேம்படுத்தும் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்க வேண்டும் என்றால், மேற்கூறிய நடவடிக்கைகளை தமிழக கல்வித் துறை கடைப்பிடிக்க வேண்டும்!
