ADDED : ஏப் 23, 2026 12:01 AM

தேனி: தேனி மாவட்டம் வெள்ளிமலை மலைப்பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் 5 ஓட்டுகளை பதிவு செய்ய தேர்தல் அலுவலர்கள் 6 மணிநேரம் பயணித்தனர்.
ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலையில் உள்ள அரசு உதவி பெறும் துரைசாமி மரகதம் தொடக்கப் பள்ளியில் ஓட்டுச்சாவடி அமைந்துள்ளது. ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் இந்த ஓட்டுச்சாவடி உள்ளது.
இங்கு 3 ஆண்கள், இரு பெண்கள் என மொத்தம் 5 வாக்காளர்கள் உள்ளனர். தேனியில் இருந்து 90 கி.மீ., துாரத்தில் உள்ள இந்த பகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் 5 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மண்டல அலுவலர், துணை மண்டல அலுவலர், 3 போலீசார் என 10 பேர் சென்றனர்.
அவர்கள் கூறியதாவது: ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு 'ஜீப்'பில் காலை 11:30 மணிக்கு புறப்பட்டோம். கரடுமுரடான மலைப்பாதையில் 6 மணிநேரம் பயணித்து ஓட்டுச்சாவடிக்கு மாலை 5:30 மணிக்கு வந்தோம். 5 வாக்காளர்களும் தங்கள் ஓட்டினை பதிவு செய்தாலும் மாலை 6:00 மணி வரை ஓட்டுச்சாவடியில் இருக்க அறிவுறுத்தி உள்ளனர். வரும் வழியில் சில காட்டு விலங்குகளை பார்த்தோம் என்றனர்.
